சென்னை: தமிழக சட்டபேரவை கூட்டத்தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டதற்குப் பிறகு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி நிருபர்களிடம் கூறியதாவது: டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழல் குறித்து பேசுவதற்கு சட்டபேரவையில் அனுமதி கேட்டோம். எங்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது அதை பற்றி பேசக்கூடாது என்று சபாநாயகர் சொல்கிறார். அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலங்களில் விசாரிக்க வேண்டும் என்று சொல்வதை தான் நாங்கள் கேட்கிறோம். நீதிமன்றத்தில் சாதகம், பாதகம் கிடையாது.
ஆதாரங்கள் அடிப்படையில் தான் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும். டாஸ்மாக் ஊழலை வேறு மாநிலங்களில் முறையீடுவது ஏன்?. வேறு மாநிலங்களில் வழக்கு சென்று விட்டால் பத்திரிகை, தொலைகாட்சியில் செய்திகள் வராது. அந்தந்த மாநில பிரச்சினைக்கு தான் அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால் தான் வேறு மாநிலத்திற்கு மாற்ற சொல்கிறார்கள். நான் எதற்கும் அஞ்சியது கிடையாது. அதிமுக தொண்டர்கள் யாரும் அஞ்சியது கிடையாது. மீனவர்களுக்கு நன்மை செய்வது போல ஒரு தோற்றத்தை முதல்வர் ஏற்படுத்துகிறார். மக்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பதை நோக்கி தான் நாங்கள் சென்று வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post டாஸ்மாக் குறித்து பேசுவதற்கு அனுமதி வழங்க மறுப்பது ஏன்?.. எடப்பாடி பழனிச்சாமி பேட்டி appeared first on Dinakaran.