
சென்னை,
தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வரும் படம் 'தொடரும்'. வருகிற 9-ம் தேதி இப்படம் தமிழிலும் வெளியாக உள்ளது.
இப்படத்தை தொடர்ந்து தருண் மூர்த்தி 'டார்பிடோ' என்ற படத்தை இயக்க உள்ளார். இதில், பகத் பாசில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் இயக்குனர் இப்பட அப்டேட் கொடுத்தார். அவர் பேசுகையில்,
"பகத் பாசில் மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோருடன் எனது அடுத்த படம் உருவாக உள்ளது. சமீபத்தில்தான் அப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டோம். இதற்கு 'டார்பிடோ' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு வகையான திரில்லர் படம். இந்த ஆண்டு இறுதியில் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவோம்" என்றார்.