* திடீரென பிரேக் போட்டதால் விபரீதம்
* செங்கல்பட்டு அருகே நேற்றிரவு பயங்கரம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே நேற்றிரவு டாரஸ் லாரி, கார், டிப்பர் லாரி என அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதிய விபத்தில் 3 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். 4 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டாரஸ் லாரியின் டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அகலபதும்பூர ஜானகிபுரத்தை சேர்ந்தவர் அய்யனார் (56). இவரது மனைவி தெய்வபூஞ்சாரி (52). இந்த தம்பதியரின் மகன் கார்த்திக் (36). இவரது மனைவி நந்தினி (32), பிள்ளைகள் இளமதி (7), சாய்வேலு (1). இவர்கள் அனைவரும், உறவினரான சரவணன் என்பவருடன் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் சென்றனர். அங்கு சில விசேஷங்களில் கலந்து கொண்டு விட்டு நேற்று நள்ளிரவு மீண்டும் மதுரைக்கு காரில் புறப்பட்டனர்.
செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோயில் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து சென்றது. அய்யனார் குடும்பத்தினர் சென்ற காரின் முன்னால் சென்ற ஒரு டாரஸ் லாரியின் டிரைவர், திடீரென பிரேக் போட்டார். அதனால் பின்னால் வந்த கார், அந்த டாரஸ் லாரியின் பின்னால் பயங்கரமாக மோதியது. அதே நேரத்தில், பின்னால் வந்த டிப்பர் லாரி, கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார், டிப்பர் லாரியின் பின்பகுதியில் புகுந்து நொறுங்கியது. காரில் பயணம் செய்த அனைவரும் பலத்த காயத்துடன் அலறி துடித்தனர். இந்த விபத்தில் அய்யனார், சரவணன், சாய்வேலு ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மற்ற 4 பேர் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தனர்.
தகவலறிந்து மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காகவும், இறந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில், இளமதி என்ற சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 2 மணி நேரத்துக்கும் ேமலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது். போலீசார் விரைந்து செயல்பட்டு, விபத்தில் சிக்கிய வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். இந்த கோர விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post டாரஸ் லாரி- கார்- டிப்பர் லாரி என அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதல்; 3 பேர் நசுங்கி பலி; 4 பேர் சீரியஸ் appeared first on Dinakaran.