டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: பாராட்டு விழாவில் பங்கேற்க முதல்-அமைச்சரை அழைத்த கிராம மக்கள்

2 weeks ago 3

சென்னை,

மதுரை மேலூர் அருகே உள்ள அரிட்டாப்படி உள்ளிட்ட கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கடந்த ஆண்டு நவம்பர் மாத தொடக்கத்தில் ஏலத்தின் மூலம் மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து அரிட்டாப்பட்டி சுற்றியுள்ள கிராங்களில் உள்ள ஏராளமான மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் வலுவடைந்தநிலையில், மதுரையை நோக்கி கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக பேரணியாக சென்றனர்.

இதனைத் தொடர்ந்து தமிழக சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின் போது பேசிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், "தான் பதவியில் இருக்கும் வரை இத்திட்டத்தை கொண்டு வர விட மாட்டேன். தமிழகத்தில் டங்ஸ்டன் வருவதற்கான எந்த காரணமும் கிடையாது. அப்படி டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் நான் முதல்-அமைச்சர் பொறுப்பில் இருந்த் விலகி கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்திருந்தார். தமிழக அரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் சட்டசபையில் தனி தீர்மானம் நிறைவேற்றியது. இதுதொடர்பாக தமிழக எம்.பி.-க்களும் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு டங்ஸ்டன் திட்டத்தை மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இருப்பினும் தொடர்ந்து கிராம மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த சூழலில் கடந்த 21-ம் தேதி போராட்டக்குழு நிர்வாகிகள் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உடன் மத்திய மந்திரி கிஷன் ரெட்டியை சந்திக்க சென்றனர்.

இதனைத்தொடர்ந்து மத்திய மந்திரியிடம் போராட்டக்குழு பேச்சுவார்த்தை நடத்தி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மத்திய மந்திரியும், பிரதமர் மோடியுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். இதனிடையே தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் மகிழ்ச்சிகரமான செய்தி வரும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், நேற்று டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு அரிட்டாபட்டி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 48 கிராம மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. போராட்டம் வெற்றி அடைந்ததை கொண்டாடும் வகையில் இனிப்புகளை வழங்கி கிராம மக்கள் கொண்டாடினர்.

இந்நிலையில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்ததற்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து மதுரை அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர் நன்றி தெரிவித்துக்கொண்டனர். மேலும் அரிட்டாபட்டி, வெள்ளாளபட்டி பகுதியில் நாளை (ஜன. 26ம் தேதி) நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்துகொள்ள முதல்-அமைச்சருக்கு அழைப்பு விடுத்தனர்.

இதன்படி நாளை காலையில் சென்னையில் நடைபெறும் குடியரசு தின நிகழ்ச்சிகள் முடிந்தபிறகு, விமானம் மூலமாக மதுரை செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பின் அங்கிருந்து சாலை வழியாக அரிட்டாபட்டி சென்று அங்கு நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article