
சென்னை,
ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 62-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. முதலில் இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடக்க இருந்தது. ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்ட இவ்விரு அணிகளும் ஆறுதல் வெற்றிக்காக மல்லுக்கட்டுகின்றன.
நடப்பு சீசனில் 12 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 9 தோல்வி என 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கும் சென்னை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் கடைசி இடத்தை தவிர்த்து விடலாம் என்ற சூழலில் களமிறங்க உள்ளது.
முன்னதாக நடப்பு சீசனில் சென்னை அணியில் இடம் பெற்றிருந்த குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக விலகினார். அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பிரெவிஸ் மாற்று வீரராக சென்னை நிர்வாகம் ஒப்பந்தம் செய்தது.
அந்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்டு வரும் பிரெவிஸ் சென்னை அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார்.
சென்னை அணியில் பிரெவிஸ் 12-ம் நம்பர் கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடி வருகிறார். ஆனால் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடிய போதும் சரி, ஐ.பி.எல்.-ல் மும்பை இந்தியன்ஸ் தரப்பில் விளையாடிய போதிலும் சரி அவர் 17-ம் நம்பர் கொண்ட ஜெர்சி அணிவது வழக்கம். ஆனால் அவர் ஏன் தற்போது 12-ம் நம்பர் பொறித்த ஜெர்சியை அணிந்து விளையாடுகிறார்? என்பது ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியது.
இதற்கான காரணம் குறித்து பிரெவிஸ் பேசிய வீடியோவை சிஎஸ்கே நிர்வாகம் தங்களது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அந்த பதிவில் பேசியுள்ள பிரெவிஸ், "ஏப்ரல் 12ம் தேதிதான், என்னை அணியில் சேர்த்துக்கொள்ள விரும்புவதாக சிஎஸ்கேவிடம் |இருந்து அழைப்பு வந்தது. அதனால்தான், எனது ஜெர்சி நம்பரை '12' ஆக வைத்துள்ளேன்." என்று கூறியுள்ளார்.