புதுடெல்லி: ஜெயலலிதா நகைகள் தொடர்பான வழக்கில் கர்நாடகா ஐகோர்ட் உத்தரவுக்கு தடைக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தீபா மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 1991-96 வரை தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது, வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து குவிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிந்து சோதனை நடத்தினர். அப்போது தங்கம், வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள், ராயல் கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நகைகள் அனைத்தும் தற்போது கர்நாடக அரசின் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா நகை தொடர்பான விவகாரத்தில் அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் தீபக் ஆகியோர் தொடர்ந்த வழக்கை ஏற்க மறுத்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மற்றும் கர்நாடகா உயர்நீதிமன்றம் ஆகியவை, அந்த மனுக்களை தள்ளுபடி செய்தது. மேலும் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் மற்றும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஆகியவை வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில் பறிமுதல் செய்த சொத்துகள் தமிழ்நாடு அரசுக்கு தான் சொந்தம் என்பதையும் உறுதி செய்திருந்தது.
இந்நிலையில் ஜெ.தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.சத்தியகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். அதில், ‘ஜெயலலிதா நகைகள் தொடர்பான விவகாரத்தில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மற்றும் கர்நாடகா உயர்நீதிமன்றம் ஆகியவை தவறான உத்தரவை பிறப்பித்துள்ளது. மறைந்த தனது அத்தையான ஜெயலலிதாவின் நகைகளை தான், அவரது அண்ணன் மகளான தீபா கேட்கிறார். அதற்கான உரிமை அவருக்கு இருக்கிறது. எப்படி அரசிடம் நகைகளை ஒப்படைக்க முடியும். எனவே இந்த வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு உரிய உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மற்றும் கர்நாடகா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் நகைகளை தீபாவிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
The post ஜெயலலிதா நகைகள் தொடர்பான வழக்கு : கர்நாடகா ஐகோர்ட் உத்தரவுக்கு தடைக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தீபா மேல்முறையீடு appeared first on Dinakaran.