சென்னை: சட்டப்பேரவை தலைவரை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறு வருகிறது. இந்நிலையில், சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; தற்போதைய பேரவைத் தலைவர் நடுநிலையுடன் செயல்படுகிறார். அதிமுக ஆட்சியில் சபாநாயகர்கள் எப்படி செயல்பட்டனர் என்பதை மக்கள் அறிவர். சபாநாயகர் அப்பாவு ஜனநாயக நடவடிக்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். மற்றவர்கள் மனம் வருந்தாத வகையில் தன்னுடைய நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டவர். நேர்மையான கருத்துகளை ஆணித்தரமாக எடுத்துக் கூறக்கூடியவர்.
கனிவானவர், அதே நேரத்தில் கண்டிப்பானவர். இவை இரண்டுமே பேரவைக்குத் தேவை என்பதை ஏற்றுக்கொள்வீர்கள். இவை இல்லாவிட்டால் பேரவை கண்ணியத்தோடு, கட்டுப்பாடோடும் இருக்காது. எனது தலையீடோ, அமைச்சர்களின் தலையீடோ இல்லாத வகையில்தான் சபாநாயகர் செயல்படுகிறார். சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததை எண்ணி வருந்தினேன். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது பற்றோடு செயல்படுபவர் பேரவைத் தலைவர் அப்பாவு. அதிமுக ஆட்சியில் எத்தனை விதிமீறல்கள், நினைத்தாலே நெஞ்சு சுடுகிறது. அதிமுகவினரின் வாதங்களில் உண்மைக்கு மாறானவை உள்ளன.
மேலும், அருகதை என்ன, யோக்கியதை என்ன என்றெல்லாம் அதிமுக ஆட்சியில் பேசினர். சபாநாயகர் தலைவரின் நடுநிலையான செயல்பாடுகளை எடுத்துரைக்க வேண்டிய கடமை முதலமைச்சருக்கு உள்ளது. அதிமுக ஆட்சியில் சபாநாயகர்கள் நடந்துகொண்டதுபோல் தற்போதைய பேரவைத் தலைவர் அப்பாவு நடந்துகொள்வதில்லை. சுதந்திர காற்றை தமிழ்நாடு சட்டப்பேரவை சுவாசித்து கொண்டிருக்கிறது. அரசு மீது குற்றம், குறை கூற முடியாதவர்கள், இவ்வாறு தீர்மானம் கொண்டுவந்துள்ளனர் என்றார். மேலும், உட்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தால், அதை திசை திருப்ப இப்படி ஒரு தீர்மானமா? என எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
The post ஜனநாயக உரிமைகளை மதிக்கக்கூடியவர் சபாநாயகர் அப்பாவு.. அதிமுக உட்கட்சி குழப்பத்தை மறைக்க நம்பிக்கையில்லா தீர்மானமா?: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!! appeared first on Dinakaran.