சொத்துக்குவிப்பு வழக்கில் புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ.விற்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்!!

2 weeks ago 5

புதுச்சேரி : சொத்துக்குவிப்பு வழக்கில் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் மற்றும் அவரது தந்தைக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.புதுச்சேரி பொதுப்பணித் துறையில் மேற்பார்வை பொறியாளராகப் பணியாற்றிய ஆனந்தன், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. 1997-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடியே 75 லட்சம் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், ஆனந்தனின் மனைவி மற்றும் மகனும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அசோக் ஆனந்த் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இவர்களுக்கு எதிரான வழக்கை புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. வழக்கு விசாரணையில் இருந்த போது ஆனந்தனின் மனைவி மரணம் அடைந்ததை அடுத்து, அவருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது.மேலும் முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் மற்றும் அவரது தந்தை ஆனந்த் மீதான வழக்கை விசாரித்த புதுச்சேரி நீதிமன்றம், இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து 2018-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துகளை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், தீர்ப்பை எதிர்த்து முன்னாள் அரசு அதிகாரி ஆனந்தன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த் மேல்முறையீடு செய்தனர். ஆனால் இருவரின் மேல்முறையீட்டு மனுக்களையும் சென்னை ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதன் மூலம் சொத்துக்குவிப்பு வழக்கில் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் மற்றும் அவரது தந்தைக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

The post சொத்துக்குவிப்பு வழக்கில் புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ.விற்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்!! appeared first on Dinakaran.

Read Entire Article