சொத்து தகராறை தடுத்த கட்டிட மேஸ்திரி அடித்துக்கொலை வேலூர் அருகே பரபரப்பு

3 hours ago 1

வேலுார், பிப்.14: வேலூர் அருகே சொத்து தகராறை தடுத்த கட்டிட மேஸ்திரி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் செம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுமார்(52), இவரது சகோதரர் மூர்த்தி(46), விவசாயிகள். இவர்களுக்கிடையே வீட்டுமனை பாகப்பிரிவினை தொடர்பாக நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. கடந்த 10ம்தேதி வீட்டின் நுழைவாயிலில் இரும்புகேட் வைப்பது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் கட்டை, இரும்புகம்பி, கத்தியால் தாக்கிக்கொண்டனர். இதில் சுகுமாருக்கு தலை, தோள்பட்டை காலில் படுகாயம் ஏற்பட்டது. தகராறை தடுக்க வந்த சுகுமாரின் உறவினர்களான முரளி, விஷ்ணு ஆகியோரும் தாக்குதலில் படுகாயமடைந்தனர்.

அதேபோல் மூர்த்தி மனைவி மல்லிகா, மகன்கள் கோகுல், தினேஷ் ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த இருதரப்பினரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து அரியூர் போலீசில் இருதரப்பினரும் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் மூர்த்தி, அவரது மனைவி மல்லிகா, மகன் கோகுல், தினேஷ், ஆதித்யன், கலைச்செல்வன் ஆகியோரும், மற்றொரு தரப்பில் சுகுமார், அவரது மகன் சந்தோஷ், சரத்குமார், முரளி, கவுசல்யா மற்றும் ஆர்த்தி ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மூர்த்தியின் மனைவி மல்லிகா, மகன் கோகுல், கோகுலின் நண்பரான கடலூர் மாவட்டம் குடிகாடு பகுதியை சேர்ந்த ஆதித்யன்(20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் படுகாயம் அடைந்து வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுகுமாரின் உறவினரான விஷ்ணு (33) சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். உறவினர் தகராறில் அடித்து கொலை செய்யப்பட்ட விஷ்ணு கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். இவருக்கு ராதிகா என்ற மனைவி, தேவா(8) என்ற மகன், லியா(6) என்ற மகள் உள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post சொத்து தகராறை தடுத்த கட்டிட மேஸ்திரி அடித்துக்கொலை வேலூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article