சேலம் வழியாக காரில் கடத்திய 400 கிலோ ஹான்ஸ் பறிமுதல்

6 days ago 6

சேலம், ஏப்.12: பெங்களூரில் இருந்து கரூருக்கு சேலம் வழியாக காரில் கடத்தப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெங்களூரில் இருந்து சேலம் வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சேலம் சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ஐ.மோகனா மற்றும் போலீசார் வாகன சோதனை செய்து வருகின்றனர். அதன்படி நேற்றுமுன்தினம் சூரமங்கலம் மாமாங்கம் பகுதியில் பெட்ரோல் பங்க் அருகில் வந்த காரை சோதனை செய்தனர். உள்ளே தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், விமல், கணேஷ் போன்ற போதை புகையிலை பொருட்கள் இருந்தது. உடனடியாக காரை போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு சென்று விசாரித்தனர். பெங்களூரு தாஸ்ரஹள்ளி பகுதியை சேர்ந்த அமிர் ப்ரீத்சிங் (32) என்ற டிரைவரை கைது செய்தனர்.

விசாரணையில் பெங்களூரில் இருந்து கரூருக்கு இவற்றை கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து 409 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கார் உரிமையாளர் ராஜேஸ்குமார், மோகன் உள்பட பலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ₹3 லட்சத்து 28 ஆயிரம் இருக்கும். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சேலம் வழியாக காரில் கடத்திய 400 கிலோ ஹான்ஸ் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article