சென்னை: “ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பல ஜனநாயக விரோத சக்திகளை நிலைகுலைய வைத்துள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். உச்ச நீதிமன்றம் குறித்து குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்த கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில், முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், “குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியாது” எனத் தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டு 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளைச் சிதைத்து, பொதுக் கருத்தாடலில் வலதுசாரிக் கருத்துகளைத் திணிக்க முற்படும் தற்போதைய தீங்கானது ஆளுநர்கள், குடியரசுத் துணைத் தலைவர், அவ்வளவு ஏன் குடியரசுத் தலைவர் உட்பட அரசியலமைப்புப் பதவிகளை அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதில் இருந்து முளைத்த ஒன்றாகும்.