செம்பனார்கோயில் : மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலானோர் பிரதான தொழிலாக விவசாய பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.செம்பனார்கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெல், பருத்தி, வாழை, வெண்டைக்காய், கீரை வகைகள் போன்ற விளை பொருட்களை விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் செம்பனார்கோயில் அருகே கீழையூர், கருவிழந்தநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளனர்.
இதுகுறித்து வெண்டைக்காய் சாகுபடி விவசாயி ஒருவர் கூறுகையில், இந்த பகுதியில் பெரும்பாலும் நெல், பருத்தி, வாழை உள்ளிட்டவைகள் தான் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அவ்வப்போது வெண்டைக்காய், சோளம் மற்றும் கீரை வகைகளையும் சாகுபடி செய்வோம்.
அந்த வகையில் கடந்த மாத தொடக்கத்தில் வெண்டைக்காய் சாகுபடி செய்தேன். வெண்டைக்காய் மக்கள் விரும்பி சமைத்து சாப்பிடக்கூடிய பயிர்களில் ஒன்றாகும். இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால் அறிவு வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும். அவற்றில் உள்ள வழவழப்புத் தன்மையால் பலரும் அதை விரும்பி உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. வழவழப்புத் தன்மையில்தான் வெண்டைக்காயின் அத்தனை மருத்துவப் பலன்களும் மறைந்துள்ளன.
இதனை எல்லா மண் வகையிலும் பயிரிடலாம். நல்ல உரச்சத்துள்ள மண்களில் மிகவும் நன்றாக வளரும். சாகுபடியின்போது மூன்று முதல் நான்கு முறை நிலத்தை உழவேண்டும். அப்போது தான் விரைந்து விளைச்சலாகும். வெண்டை சாகுபடிக்கு கோ 2, எம்டியு 1, அர்கா அனாமிகா போன்ற ரகங்கள் உகந்ததாக இருக்கும். வெண்டைக்காயை சாகுபடி செய்வதற்கான செலவு குறைவாகும். காய்கள் முற்றுவதற்கு முன்பு அறுவடை செய்து விடவேண்டும். அப்போது தான் நல்ல மகசூல் கிடைக்கும் என்று கூறினார்.
The post செம்பனார்கோயில் அருகே வெண்டை சாகுபடியில் விவசாயிகள் மும்முரம் appeared first on Dinakaran.