கொள்கை, தொண்டர் பலம், வாக்குறுதிகள், வாக்கு வங்கி இவற்றை எல்லாம் நம்புவதைவிட அரசியல் கட்சிகள் இப்போது தேர்தல் வியூக வகுப்பாளர்களையே மலைபோல் நம்பி நிற்கின்றன. 2012 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில், மோடியின் வெற்றிக்காக பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளராக களமிறங்கினார். சர்வதேச அளவிலான அரசியல் வியூகங்களை அறிந்திருந்த பிரசாந்த் கிஷோர், வளர்ச்சி கோஷங்களை முன்னிறுத்தி வகுத்துக் கொடுத்த தேர்தல் வியூகம் மோடியை குஜராத்துக்கு முதல்வராக்கியது.
இதன் தொடர்ச்சியாக 2014-ல் என்டிஏ-வுக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளும் பிரசாந்த் கிஷோரின் வியூகத்தை பின்பற்றி வென்றன. 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, ‘நமக்கு நாமே நடைபயணம்’ மூலம் திமுக-வை தேர்தலுக்கு தயார்படுத்தியவர், ‘மைண்ட் ஷேர் அனலிடிக்ஸ்’ நிறுவனத்தின் சுனில் கனுகோலு.