சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சென்னை வடக்கு மாவட்டம் சார்பில், மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடை வழங்கும் நிகழ்ச்சி தி.நகர் முத்துரங்கன் சாலையில் நேற்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் அப்புனு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டு மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர், இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று, முத்துரங்கன் சாலை, உஸ்மான் சாலை, வெங்கடநாராயணா சாலை, தெற்கு உஸ்மான் சாலை,பாண்டி பஜார், ஆயிரம் விளக்கில் சாலையோர வியாபாரிகள் 505 பேருக்கு புஸ்ஸி ஆனந்த் நிழற்குடை வழங்கினார். அப்போது ஏராளமான தவெக தொண்டர்களும், சாலையில் கூடியதால், தி.நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.