மீனம்பாக்கம்: டெல்லியில் நேற்றிரவு பலத்த சூறைக்காற்று, மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சென்னைக்கு வரவேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், சென்னையில் இருந்து இன்று காலை 6 மணியளவில் டெல்லி செல்லவேண்டிய ஏர் இந்தியா விமானம் என 2 விமான சேவைகள் இன்று காலை ரத்து செய்யப்பட்டது. இன்று அதிகாலை 4.40 மணிக்கு அந்தமான் விமானம், டெல்லிக்கு காலை 5.55 மணி, காலை 9.50 மணி விமானங்கள், மும்பைக்கு காலை 6.40 மணி விமானம், காலை 7.55 மணிக்கு கொச்சி விமானம், காலை 11.40 மணிக்கு பாட்னா விமானம் மற்றும் சர்வதேச விமானங்களான ஹாங்காங், பிராங்க்பர்ட், மொரிசியஸ், பாங்காக் உள்பட 12 விமானங்களின் புறப்பாடு மற்றும் சிங்கப்பூர், டெல்லி, மொரிசியஸ், கோவை உள்பட 9 விமானங்களின் வருகை என மொத்தம் 21 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
சில விமானங்கள் 3 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன. எனினும், இந்த விமானங்களின் வருகை, புறப்பாட்டில் தாமதம் குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் அவை எப்போது வரும், புறப்படும் என்பது குறித்து பயணிகளுக்கு முறையான அறிவிப்புகள் செய்யப்படவில்லை. இதனால் 100க்கும் மேற்பட்ட பயணிகள் அவதிப்பட்டனர். இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘’டெல்லியில் நேற்றிரவு மோசமான வானிலை காரணமாக சென்னைவரும் விமானங்கள், டெல்லி வான்வெளியை கடந்து சென்னை வரும் விமானங்கள் போன்றவை தாமதமாக வந்ததால் தாமதங்கள் மற்றும் விமானங்கள் ரத்து போன்ற நிலைமை ஏற்பட்டது. இதுகுறித்து பயணிகளுக்கு அந்தந்த ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன’’ என்றனர்.
The post சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து, காலதாமதம்: பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.