சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 9 விமானங்கள் திடீர் ரத்து: பயணிகள் கடும் அவதி

2 months ago 10

மீனம்பாக்கம்: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் 9 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, நேற்று காலை 9.40க்கு பெங்களூருக்கும், மாலை 6.10க்கு கவுகாத்திக்கும், இரவு 10.40க்கு கொல்கத்தாவுக்கும் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மற்றும் இரவு 9.10க்கு டெல்லிக்கு செல்ல வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 4 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதேபோல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு அதிகாலை ஒரு மணிக்கு புனேயில் இருந்தும், காலை 9க்கு பெங்களூருவில் இருந்தும், மாலை 5.35க்கு பெங்களூருவில் இருந்தும், இரவு 10.05க்கு கொல்கத்தாவில் இருந்தும் வரவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மற்றும் இரவு 8.20க்கு டெல்லியில் இருந்து வரவேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 4 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் என மொத்தம் 9 பயணிகள் விமானங்கள் திடீரென நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்திருந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக நிர்வாக காரணங்கள் என்று கூறி, பயணிகள் விமானங்கள் அடிக்கடி ரத்து செய்யப்படுவது தொடர்ச்சியாக நடக்கிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் முன்பதிவு செய்துள்ள பயணிகள், தாங்கள் பயணிக்க வேண்டிய விமானங்கள் அன்றைய தினம் இயக்கப்படுகிறதா? என்று அந்தந்த விமான நிறுவனங்களிடம் கேட்டுவிட்டு, அதன் பின்பே விமான நிலையம் வரவேண்டிய நிலை உள்ளது.

The post சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 9 விமானங்கள் திடீர் ரத்து: பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article