சென்னை: சென்னை விமான நிலையத்தில் கூடுதல் எடைக்காக இலங்கை புதுமணப் பெண்ணிடம் 11 பவுன் தங்க தாலிச் சங்கிலியை பறிமுதல் செய்த பெண் சுங்கத்துறை அதிகாரி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, இதேபோல மற்றொரு பெண் பயணியிடம் பறிமுதல் செய்யப்பட்ட 10 தங்க வளையல்களை திருப்பிக் கொடுக்கவும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த தனுஷிகா என்ற பெண்ணுக்கும், பிரான்ஸில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த ஜெயகாந்த் என்பவருக்கும் கடந்த 2023-ம் ஆண்டு மதுராந்தகத்தில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது. அதன்பிறகு ஜெயகாந்த் பிரான்ஸ் நாட்டுக்கும், தனுஷிகா இலங்கைக்கும் சென்றுள்ளனர்.