சென்னை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார். இந்நிலையில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டியும், நாடாளுமன்றத்தில் அம்பேத்கர்பற்றி அவதூறாக பேசியதாகவும், தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்தும் தமிழக காங்கிரஸ் சார்பில் கருப்புக் ெகாடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார்.
அதன்படி, செல்வப்பெருந்தகை தலைமையில் மயிலாப்பூரில் அம்பேத்கர் பாலம் (சிட்டி சென்டர் அருகில்) கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அப்போது, உள்துறை அமைச்சர் அமித்ஷாவே திரும்பிப் போ என்றும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி கோஷங்களை எழுப்பினர். மேலும், அமித்ஷாவை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் கருப்பு ரிப்பன் கட்டிய புறாவை பறக்க விட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், கிராம கமிட்டி சீரமைப்பு குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ், அசன் மவுலானா எம்எல்ஏ, துணைத் தலைவர்கள் சொர்ணா சேதுராமன், கோபண்ணா, பொதுச்செயலாளர்கள் தளபதி பாஸ்கர், காண்டீபன், டி.செல்வம், அமைப்பு செயலாளர் ராம் மோகன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பொறுப்பாளர் தாம்பரம் நாராயணன், திருவான்மியூர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் உருவபொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை உள்பட 250 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள சமூக நலக் கூடத்தில் வைத்தனர். மாலையில் அவர்களை விடுவித்தனர்.
The post சென்னை வந்த அமித்ஷாவை கண்டித்து கருப்பு ரிப்பன் கட்டிய புறாவை பறக்க விட்டு காங்கிரசார் ஆர்ப்பாட்டம்: உருவ பொம்மையை எரித்ததால் 250 பேர் கைது appeared first on Dinakaran.