சென்னை பூந்தமல்லி – போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவை 2025 இறுதிக்குள் தொடங்கப்படும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

3 hours ago 3

சென்னை :சென்னை பூந்தமல்லி – போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவை 2025 இறுதிக்குள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராகவும் – நான் துணை முதலமைச்சராகவும் இருந்தபோது தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ இரயில் பணிகள், தற்போதைய நமது திராவிட மாடல் அரசில் விரைந்து முன்னேற்றம் கண்டு வருகின்றன. முந்தைய ஆட்சியின் தாமதங்களுக்குப் பிறகு, இரண்டாம் கட்டப் பணிகளை, இந்தியாவிலேயே முதன்மையாக மாநில அரசின் நிதியைக் கொண்டே தொடர்ந்து வந்தோம். அண்மையில், நமது கோரிக்கையை ஏற்று, ஒப்புதல் வழங்கப்பட்ட ஒன்றிய அரசின் பங்களிப்போடு இன்னும் விரைவாகச் செயல்படுத்தி வருகிறோம்.

2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் பூந்தமல்லி–போரூர் இடையேயான மெட்ரோ இரயில் சேவை தொடங்கி வைக்கப்படும். மீதமுள்ள பணிகளையும் குறித்த காலத்துக்குள் நிறைவேற்ற, @cmrlofficial
நிர்வாகத்துக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். இப்பணிகள் முழுமையாக நிறைவுறும்போது, இந்தியாவிலேயே நகரப் பொதுப் போக்குவரத்து இணைப்பினில் சென்னை புதிய தர அளவுகோல்களை நிர்ணயிக்கும்!

நடைபெற்று வரும் பணிகளை இன்று ஆய்வு செய்தபோது, நாம் தொடங்கிய திட்டம் இன்று செயலாக்கம் பெற்று, மேலும் விரிவடைந்து வருவதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன். இந்த நேரத்தில் கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ஒப்புதலையும் விரைந்து ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post சென்னை பூந்தமல்லி – போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவை 2025 இறுதிக்குள் தொடங்கப்படும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article