சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் (89) உடல்நலக் குறைவால் நேற்று இயற்கை எய்தினார். நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம், 1988ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரலாற்று சிறப்புமிக்க பல தீர்ப்புகளை வழங்கியவர். இவரது பரிந்துரையின் அடிப்படையில் தான் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு, கிறித்தவர்கள் இடஒதுக்கீடு, அருந்ததியர் இடஒதுக்கீடு ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டன. சமூகநீதி வரலாற்றில் தமது முத்திரையை மிகவும் ஆழமாக பதித்தவர் இவர். நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் மறைவு சமூக நீதித்துறைக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். நீதி துறைக்கும், மாநிலத்திற்கும் ஆற்றிய சேவையை போற்றும் வகையில் அவரது இறுதி நிகழ்வு காவல் துறை மரியாதையுடன் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
* முதல்வர் இரங்கல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அருந்ததியருக்கு 3 விழுக்காடு உள்ஒதுக்கீடு கொண்டு வருவதற்கான பரிந்துரையை அளித்த குழுவின் தலைவராக இருந்தவர் ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம். பிற்படுத்தப்பட்டோருக்கான தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான அறிக்கையினையும் தயாரித்து அளித்தவர். நீதித்துறைக்கு மட்டுமின்றி சமூகநீதி கருத்தியல் தளத்தில் இயங்கும் அனைவருக்கும் இது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நீதித்துறை சார்ந்தோருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன்.
The post சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் மறைவு: காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.