(9.6.2025) வைகாசி விசாகம் நம்மாழ்வார் திருநட்சத்திரம்
1. முன்னுரை
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இந்த மூன்று நட்சத்திரங்களும் குருவுக்கு உரிய நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்கள் ஆறு ராசிகளில் விரவிக்கிடக்கின்றன. புனர்பூசம் மிதுன கடக ராசியிலும், விசாகம் துலாம் விருச்சிக ராசியிலும், பூரட்டாதி கும்ப மீனத்திலும் பரவி இருக்கிறது. ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை ராசிகளில் இந்த நட்சத்திரங்கள் இருப்பதால், அக நன்மைகளையும் புற நன்மைகளையும் செய்யக்கூடிய தன்மையில் அமைந்திருப்பதைக் காணலாம். அகம் என்பது அன்பு, மகிழ்ச்சி, அறிவு முதலியவற்றைச் சொல்லலாம். புறக் காரணிகள் என்று சொல்லுகின்ற பொழுது பணம், கௌரவம், பிள்ளைகள், அந்தஸ்து முதலியவற்றையும் குரு பகவான் தாராளமாகத் தருவார்.
2. முருகனும் நம்மாழ்வாரும்
வைகாசியில் வரும் விசாகம் ஏற்றம் உடையது. காரணம் வைகாசி மாதத்திற்கு உரிய ராசிக்கு உரியவரும், விசாக நட்சத்திரம் (முதல் மூன்று பாதங்கள்) அமைந்த ராசிக்கு உரியவருமாக சுக்கிரன் இருக்கின்றார். எனவே குரு, சுக்கிரன் என்கின்ற இரண்டு சுபகிரகங்களின் அமைப்பில் வைகாசி விசாகம் அமைந்திருக்கிறது. வைகாசி மாசம் விசாகம் நட்சத்திரம் பல திருவிழாக்களையும் உற்சவங்களையும் உள்ளடக்கியது. குறிப்பாக முருகப்பெருமான் ஆலயத்தில் மிகச் சிறப்பான உற்சவம் வைகாசி விசாகத்தில் நடைபெறும். அதைப்போலவே வைணவத்தில் நம்மாழ்வார் அவதரித்த நட்சத்திரமாக வைகாசி விசாகம் அமைந்திருக்கிறது.
3. வைகாசிக்குப் பெயர் தந்த விசாகம்
விசாக நட்சத்திரம் முதல் மூன்று பாதங்களில் பிறந்தவர்கள் தலைசிறந்த அறிஞர்களாகவும் நல்ல குடும்பத்தை உடையவர்களாகவும் சந்ததி விருத்தி உள்ளவர்களாகவும் ஞானம் உள்ளவர்களாகவும் நீதிக்கும் நேர் மைக்கும் மிகுந்த முக்கியத்துவம் தருபவர்களாகவும் இரக்க குணமும். மன அடக்கமும் புலனடக்கமும் கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு எந்தத் துயரத்தையும் எதிர் கொள்ளும் துணிச்சலைத் தரும். புத்திசாலித்தனத்தைத் தரும். செவ்வாய் ராசி என்பதால் தைரியத்தைத் தரும். அறிவின் விசாலம் முகத்தில் தெரியும். அதுவே அவர்களுக்குக் கம்பீரத்தைத் தரும்.
4. மகிழம்பூ நிறத்தில் சிவனுக்குப் பட்டாடை
வைகாசி விசாகம் ‘முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும்’. ஏனென்றால், அன்றைய தினம்தான் அவர் அவதரித்தார். வைகாசி என்ற பெயரில் வட இந்திய புண்ணிய ஸ்தலமாக காசி பெயரும் வருவதால், அந்த மாதத்தில் காசிக்கு சென்று வருவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. காசிக்கு சென்று கங்கையில் புனித நீராட முடியாதவர்கள், தங்கள் பகுதியில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு. வைகாசி பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கு மகிழம்பூ நிறத்தில் பட்டாடை சாற்றி, 108 பத்மராக கற்களால் ஆன மாலை அணிவித்து, எள் சாதம் நிவேதனம் செய்து வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
5. வைகாசி விசாகமும் கொடை விழாக்களும்
சென்னை – திருமுல்லைவாயிலில் உள்ள மாசிலா மணீஸ்வரர் கோயிலில் வைகாசி பவுர்ணமி அன்று இறைவனும், இறைவியும், லிங்கத்தில் ஐக்கியமாகும் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான அம்மன் கோயில்களில் இந்த வைகாசி மாதத்தில்தான் “கொடை விழாக்கள்” நடைபெறுகின்றன.
மணி பல்லவத்தீவில் தீவதிலகை என்ற காவல் தெய்வம் தோன்றி மணிமேகலையிடம் வைகாசிப் பவுர்ணமி அன்று கோமுகி என்ற பெயர் பொய்கையில் அள்ள அள்ளக் குறையாத ‘அமுத சுரபி என்னும் அட்சய பாத்திரம் வெளிவரும். உலக மக்களின் பசிப்பிணியை போக்கு வதற்காகவே இப்படிப்பட்ட அட்சயப் பாத்திரத்தை உனக்கு வழங்குகிறேன் என்று கூறி மறைந்தது, மணிமேகலையும் வைகாசி முழுநிலவில் கோமுகி பொய்கையிலிருந்து வெளியே வந்த அட்சயப்பாத்திரத்தை எடுத்துக்கொண்டு புகார் நகருக்குத் திரும்பினாள்.
6. எம தர்மராஜனுக்குரிய வைகாசி விசாகம்
ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரை அடுத்துள்ள பைராத் நகரின் எல்லையோரத்தில் ஓடும் பான் கங்கா நதிக்கரையில் அமைந்துள்ளது ராதாகிருஷ்ணன் கோயில். இங்கு ஆண்டுதோறும் வைஷாக பவுர்ணமி நாளில் பான்கா விழா நடக்கிறது. இந்நாளில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பான் கங்கா நதியில் நீராடி பூஜைகளும் யாகங்களும் செய்து ராதாகிருஷ்ணனை வழிபடுவார்கள். சிவபெருமான் தாணு (மரமாக)வாக இருப்பதாகவும், அம்பிகை கொடியாக (அபர்ணா) இருப்பதாகவும், முருகப்பெருமான் விசாகமாக (கீழ் கன்றாக) இருப்பதாகவும் சோமாஸ்கந்த தத்துவம் விளக்கி கூறுகிறது. தெற்கு திசையின் அதிபதியும், மரண தேவதையுமான எம தர்மராஜனுக்குரியது வைகாசி விசாகமேயாகும். அன்று எம தர்மராஜனை வழிபடுவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
7. வராகலட்சுமி நரசிம்ம மூர்த்திக்கு சந்தனக் காப்பு
திருமழபாடி திருத்தலத்தில் மழுவேந்திய சிவபெருமான் திருநடனம் புரிந்த நன்னாள் வைகாசி விசாகமாகும். பஞ்சபாண்டவரில் ஒருவரான அர்ச்சுனனுக்கு இறைவன் பாசுபதம் என்னும் ஆயுதம் வழங்கியதும் இந்நாளில்தான். இந்நாள் திருவேட்களம் என்னும் திருத்தலத்தில் பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள சிம்மா சலத்தில் கோவில் கொண்டுள்ள வராக லட்சுமி நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாகம் சிறப்பான தினமாகும். சந்தனக் காப்புடன் ஆண்டு முழுவதும் காட்சி தரும் இந்த நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாக நாளில் சந்தனப் பூச்சைக் களைவார்கள். மூல விக்கிரகத்தின் இயற்கைத் தோற்றப் பொலிவு அன்று தரிசனமாகும். பின்னர் சுமார் 500 கிலோ சந்தனம் பயன்படுத்தி சந்தனப்பூச்சு செய்வார்கள்.
8. காஞ்சி கருட சேவை
கன்னியாகுமரி அம்மனுக்கு ஆராட்டு விழா இந்நாளில் சிறப்பாக கொண் டாடப் படுகிறது. காஞ்சி கருட சேவை, வைகாசி விசாகத்தை ஒட்டியே நடைபெற்று வருகிறது. திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் என்ற மகான் வைகாசி விசாகத்தில் சித்தியடைந்ததால் இந்நாளில் அவரது குருபூஜை திருப்போரிலுள்ள அவரது சமாதியில் விசேஷமாக நடைபெற்று வருகிறது.
ராஜராஜ சோழ மாமன்னரின் சரிதத்தை நாடகமாக ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருநாளில் நடத்திய நாடக கலைஞர்களுக்கு ஊதியமாக நெல் வழங்கிட ராஜேந்திர சோழன் வழங்கிய ஆணை, தஞ்சை பெரிய கோயில் வடக்குச் சுவரில் கல்வெட்டாக உள்ளது. திருச்சி அருகில் ஐயர் மலை என்று வழங்கப்படும் வாட்போக்கி ரத்னாசலேஸ்வரர் (ரத்னகிரி) கோவில் கல்வெட்டில் வைகாசித் திருவிழா சிறப்பாக நடத்திட கோனேரின்மை கொண்டான் என்ற அரசன் நிலம் வழங்கியதை குறிப்பிடுகிறது. இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான்.
9. முருகனே விசாகன்
பொதுவாக ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு தெய்வத்திற்கு விசேஷம்.
திருவோண நட்சத்திரம், திருமாலுக்கும், திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்கும் உரியது. இந்த நட்சத்திரத்தை வைத்து பெருமாளின் பெயரை திருவோணத்தான் என்றும் சிவனின் பழைய பெயரை திரு ஆதிரையான் என்றும் சொல்லும் வழக்கம் உண்டு முருகனுக்கு கார்த்திகை நட்சத்திரம் சிறப்பானது என்பதால் கார்த்திகையான் என்கிற பெயரும், வைகாசி நட்சத்திரம் உரியது என்பதால் விசாகன் என்றும் அழைப்பது வழக்கம். வி என்றால் பறவை (மயில்), சாகன் என்றால் பயணம் என்று பொருள். மயில் மீது பயணம் செய்யக் கூடியவர் என்று பொருள்படும்.
10. இருட்டை நீக்கும் குரு
குரு என்றால் இருட்டை நீக்கி வெளிச்சத்தைத் தருபவர் என்று பொருள். குருமார்களை சமய உலகில் ஞான வெளிச்சம் தருபவர்கள் என்று சொல்வது மரபு. முருகப்பெருமான் ஞான பண்டிதனாக, தகப்பன் சுவாமியாக விளங்குவதால் தான் விசாக நட்சத்திரம் முருகன் விழாக்களுக்கு உகந்த நட்சத்திரமாக கொண்டாடப்படுகிறது. பொதுவாகவே விசாக நட்சத்திரத்தில் குரு நிலையில் உள்ள பலரும் அவதரித்து இருக்கிறார்கள்.
அல்லது அந்த நாளில் சில சிறப்புகளைச் செய்திருக்கிறார்கள். ஒருவருக்கு குருவின் கருணை மட்டும் கிடைத்து விட்டால் அவர் அக வாழ்க்கைக்கோ புற வாழ்க்கைக்கோ கவலைப்பட வேண்டியதில்லை. எல்லாவற்றையும் குரு பார்த்துக் கொள்வார். அதனால்தான் குரு பார்க்க கோடி புண்ணியம் என்றும், குருவின் பார்வையால் எல்லா தோஷமும் நாசமாகும் என்றும் சொல்லி வைத்தார்கள்.
11. குருவே பரிபூரண அருளைப் பெறும்வழி
இந்த நாளுக்கு எத்தனைச் சிறப்பு தெரியுமா? ஒன்றா இரண்டா? அதுவும் வைகாசி மாதத்தில் வரும் விசாகம் அபாரமானது. ஆன்மிக உலகில் ஒரு மைல் கல் என்று சொல்லலாம். வைகாசி மாத மூலநட்சத்திர நாள் திருஞானசம்பந்தரின் திருநட்சத்திர தினம். அன்று ஆச்சாள் புரத்தில் திருஞானசம்பந்தர் விழா சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. வைணவத்தில் நம்மாழ்வார், திருக்கோட்டியூர் நம்பிகள் அவதரித்த மாதமும் வைகாசி. நம்மாழ்வார் நட்சத்திரம் விசாகம் ஆதிசங்கரர் தோன்றியது வைகாசி பஞ்சமி. வைகாசி மாதத்தில் சிவபெருமானைப் போற்றி கடைப்பிடிக்கப்படும் விரதம், ‘ரிஷப விரதம்’ ஆகும்.
இத்தனைக்கும் முதன்மையானது வைகாசி விசாகம். முருகனின் பெருமைகளை உணர்ந்து, வைகாசி விசாகத்தில் முருகனின் திருப்பாதத்தில் சரணடைய சகலமும் கிடைக்கும். அன்றைய நாளில் முருகனுக்கு நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல், நீர்மோர், பானகம் போன்றவையும் முருகனுக்கு நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். இதன் மூலம் ஞான குருவாகிய முருகப் பெருமானின் அருளை பரி பூரணமாகப் பெறலாம்.
12. நான்கு மாதங்களில் முதல் மாதம் வைகாசி விசாகம்
ஒரு ஆண்டிற்கு 12 மாதங்கள். அதில் அழகுத் தமிழ் முருகனுக்கு அற்புத விழாக்கள் நடக்கும் தமிழ் மாதங்கள் நான்கு. வைகாசி மாதத்தில் விசாகம், கார்த்திகை மாதத்தின் கார்த்திகை, தை மாதத்தில் பூசம், பங்குனி மாதத்தின் உத்திரம் முருகக் கடவுளுக்கு உகந்த அற்புதமான நாட்களாகும். இந்த ஆண்டின் முக்கியமான முருகன் திருவிழா நடக்கும் 4 மாதங்களில் முதல் மாதம் வைகாசி விசாகம். வைகாசி மாதம் 26 ஆம் தேதி ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திங்கட்கிழமை வருகிறது.
அன்று விசாகம் நட்சத்திரம் மாலை 4:45 வரை இருக்கிறது சதுர்த்தசி திதி பிறந்து விடுகின்றது. விருச்சிக ராசியில் சந்திரன் பிரவேசித்து ரிஷப ராசியில் உள்ள சூரியனைப் பார்க்கும் காலமாக இந்த நாள் அமைகிறது. இந்த வைகாசி மாத விசாகத் திருநாளை பல்வேறு முருகன் தலங்களில் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதை அந்தந்த முருகன் தலத்துக்கான திருப்புகழ் பாடலோடு நாம் அனுபவிக்கலாம்.
13. கொண்டாடாத கோயில்களே இல்லை
முருகனின் அறுபடை வீடுகள் என்று போற்றப்படும் பழனி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை, முதலிய பிரசித்திப் பெற்ற கோயில்கள் தவிர கழுகுமலை முருகன் கோயில், கந்தக்கோட்டம் முருகன் கோயில், குமாரகோயில் வேளிமாலி முருகன், குன்றத்தூர் முருகன் கோயில், மருதமலை முருகன் கோவில், எட்டுக்குடி முருகன் கோயில் போன்ற அனைத்து கோயில்களிலும் வைகாசி விசாக நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இது தவிர ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கும் முருகன் கோயில்களிலும் வைகாசி விசாக விழா மிகச்சிறந்த வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகம் பெருவிழாவாகக் கொண்டாடப்படாத முருகன் கோயில்களே இல்லை என்று சொல்லலாம்.
14. திருப்பரங்குன்றத்து வைகாசி விசாகம்
மதுரைக்கு அருகிலுள்ள திருத்தலமான இது முதல் படைவீடாகக் கருதப்படுகிறது. திருப்பரங்குன்றத்து வைகாசி விசாக விழா திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கும். வைகாசி விசாகத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருக தரிசனம் செய்வர். பக்தர்கள் வேல் குத்தி, காவடி எடுத்து, பால்குடம் வைத்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துவர்.
சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மரிக்கொழுந்து (புஷ்ப அங்கி) அலங்காரத்தில், வசந்த மண்டபத்தில் நீர் நிரப்பப்பட்ட தொட்டியின் மீது அமைக்கப்பட்ட அழகான ஊஞ்சலில் எழுந்தருள்வார் அன்று காலை சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர் வள்ளி தெய்வானைக்கு பாலாபிஷேகமும் நடைபெறும். மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருபரங்குன்றம் ரதவீதிகளில் குவிந்து முருகனுக்கு அரோகரா கோஷம் எழுப்புவார்கள் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடத்தப்படும்.
15. திருப்பரங்குன்றத்து முருகனின் பெருமை
இத்தலத்து முருகப்பெருமானிடம் சென்று அருணகிரிநாதர் இறைஞ்சும் அழகான பாடல். (உனைத்தினந்தொழுதிலன் எனும் திருப்புகழ்) பேய்கள் கூத்தாடுவதால் ஊன் உடைந்து உடல்களிலிருந்து சிதறின மாமிசத்தை கழுகுகள் உண்ணவும், விரித்த தலைமயிர் உடைய அசுரர்களோடு போர் புரிந்த வேலனே! அழகான வள்ளி மணாளனே! மலை போன்ற தோள்களை உடையவனே! தினந்தோறும், நால்வேதமும் வல்ல பிரம்மா விதிப்படி, நீரால் அபிஷேகம் செய்து, பூக்களைக் கொண்டு அர்ச்சித்து, தேவர்களும் முனிவர்களும் தொழ, மனம் மகிழ்வோனே! சோலைகள் நிறைந்த திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் சரவண மூர்த்தியே! முருகா!
யான் உன்னைத் தினந்தோறும் தொழுவதும் இல்லை. உன் தன்மைகளை எடுத்து உரைப்பதுமில்லை. மலர்கள் கொண்டு உன் திருவடிகளை பணிவதுமில்லை. தவமும் இல்லை. முருக அன்பர்கள் இருக்கும் இடம்கூட அறியவில்லை. ஆர்வத்தோடு உன் மலையை வலம் வருவதும் இல்லை.
மகிழ்ச்சியோடு உன் புகழைத் துதிக்க விரும்புவதும் இல்லை. மலைபோல் உருவமுடன், கனைத்தவாறு வரும் எருமையின் மீது வருகின்ற, யமனின் தூதர்கள் பாசக்கயிறு கொண்டும், என்னை பலவந்தமாகத் தூக்கும் போது, மனம் கலங்கும். துன்பம் விஞ்சும். அப்போது அஞ்சேல் என்று கூறி மயிலின் முதுகினில் நீ வருவாயாக!வைகாசி விசாகத்தன்று இருந்த இடத்தில் இருந்தேனும் திருப்பரங்குன்றம் முருகனை நினைத்தால் எமபயம் நீங்கிவிடும் என்பதை இந்தப் பாடல் உணர்த்துகிறது. அடுத்து திருச்செந்தூர் செல்வோம்.
16. திருச்செந்தூரில் வைகாசி விசாகம்
வைகாசி விசாக தினத்தில் திருச்செந்தூர் சுப்ரமண்ய திருக்கோயிலில், கருவறையில் தண்ணீர் நிற்கும் படி வைத்து இறைவனுக்கு உஷ்ண சாந்தி உற்சவம் எனும் வெப்பம் தணிக்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். இந்த நாளில் இறைவனுக்கு சிறுபருப்பு பாயசம், அப்பம், நீர்மோர் முதலியவை நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. இந்த திருநாளில் திருச்செந்தூர் கோயில் வசந்த மண்டபத்தில் உள்ள நீர் தொட்டியில் ஆறு மீன் பொம்மைகளை அதில் இடுகின்றனர். முருகனின் வாயிலிருந்து சிந்திய பாலினை குடித்த அந்த மீன்கள் சாப விமோசனம் பெற்ற பாரச முனி குமாரர்களை நினைவுபடுத்தும் விதமாக ஆறு முனிவர்களின் உருவ பொம்மை வைத்து முருகன் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும்
நடத்தப்படுகிறது.
17. திருச்செந்தூர் திருப்புகழ்
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து …… வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் …… வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப …… மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து …… குறுகாயோ
மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
வழிபாடு தந்த …… மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவேலெ றிந்த …… அதிதீரா
அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி டைஞ்சல் …… களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
அலைவாயு கந்த …… பெருமாளே.
18. என்ன அழகு செந்தூர் முருகன்?
திருச்செந்தூர் முருகனை அனுபவித்து அனுபவித்துப் பாடுகின்றார் அருணகிரிநாதர். விசாக விழாவில் இவர் அந்த முருகனின் திருவுருவைக் கண்டிருப்பார் போலும். அல்லது அந்த முருகன் இவருக்கு தன் அழகைக் காட்டி இருப்பான் போலும். அழகான மயில் மீது அமர்ந்து திருச்செந்தூரில் மகிழ்ச்சியோடு வீற்றிருக்கும் பெருமாளே என்று முருகனை அழைக்கிறார் அவன் எதற்காக வீற்றிருக்கின்றான்? நம்மை காப்பாற்றுவான் என்ற அறிவு கொண்டு, அவனை அறிந்து கொண்டு, அவன் இரண்டு திருவடிகளையும் யார் கெட்டியாகப் பிடித்துக் கொள்கின்றார்களோ அவர்களைக் காப்பாற்றவே திருச்செந்தூரில் வந்து அமர்ந்தான்.
இப்படிச் சொல்லியவர் அவனுடைய செயல்களையும் பட்டியல் இடுகின்றார். கடம்ப மாலை அணிந்தவன். சிவபெருமானே குருவாக ஏற்றுக் கொண்டவன். கூரிய வேலால் எதிரிகளை அழித்தவன். வள்ளியின் மணாளன். இப்படியெல்லாம் அழகாக வர்ணித்து அடியார்களின் துன்பத்தை களைவதற்காக திருச்செந்தூரில் இருக்கின்றான் என்பதை ‘‘அறிவால் அறிந்துன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடை ஞ்சல் …… களைவோனே” என்று முடிக்கின்றார். அருணகிரிநாதரின் இந்தத் திருப்புகழை மனதில் தேக்கி, திருச்செந்தூர் முருகனின் அழகைக் காண வேண்டும். விசாக தினத்திலே அந்த விசாகனை நினைத்தால் வினைகள் தானே தீரும். அடுத்து பழனிக்குச் செல்வோம்.
19. பழநி முருகன் கோயிலில் வைகாசி விசாகம்
பழநி முருகன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது கொடியேற்றத்துடன் தொடங்கும் விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் (ஜூன் 9 ஆம் தேதி) நடைபெறும். இந்தத் திருவிழாவில், பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடிபட பூஜை போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.
பழநியில் வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய மூன்று நாட்களிலும் மலைக் கோயிலில் வள்ளித் திருமணம் நடைபெறும். அதேபோல், பெரியநாயகி அம்மன் கோயிலிலும் மூன்று முறை நிகழ்த்து கிறார்கள். பழநிமலைக் கோயிலிலும், பள்ளியறையில் வள்ளி மட்டுமே முருகனுடன் எழுந்தருள்கிறாள். திருச்செந்தூரில் பங்குனி உத்திர விழாவில் வள்ளித் திருமணம் நடத்துவர். இங்கே, வள்ளியே பள்ளியறை நாச்சியாராக முருகனுடன் பள்ளியறைச் சேவை காண்கிறாள்.
20. பழனி 10 நாட்கள் திருவிழா அட்டவணை
நமது நேயர்களின் வசதிக்காக இந்த ஆண்டு வைகாசி விசாகம் பழனியில் எப்படிக் கொண்டாடப்படுகிறது என்ற நிகழ்ச்சி நிரலை முன்வைக்கிறோம்.
3 ஜூன், 2025 – செவ்வாய் – நாள் 1
— காலை – கொடியேற்றம்
— மாலை – சப்பரம்
4 ஜூன், 2025 – புதன் – நாள் 2
— காலை – தந்த பல்லக்கு
— மாலை – தங்க மயில் வாகனம்
5 ஜூன், 2025 – வியாழன் – நாள் 3
— காலை – தந்த பல்லக்கு
— மாலை – காமதேனு வாகனம்
6 ஜூன், 2025 – வெள்ளி – நாள் 4
— காலை – தந்த பல்லக்கு
— மாலை – ஆடு கிடா வாகனம்
7 ஜூன், 2025 – சனி – நாள் 5
— காலை – தந்த பல்லக்கு
— மாலை – வெள்ளி யானை வாகனம்
8 ஜூன், 2025 – ஞாயிறு – நாள் 6
— காலை – தந்த பல்லக்கு
— மாலை – வெள்ளி மயில் வாகனம்
— இரவு – அருள்மிகு வள்ளி தெய்வானை முத்துக்குமாரசுவாமி திருக் கல்யாணம்
9 ஜூன், 2025 – திங்கள் – நாள் 7 – வைகாசி விசாகம் – தேரோட்டம்
— காலை – தொள்ளுக்கினியன்
— காலை – காலை முதல் – லக்னம் – திருத்தேர் யேற்றம்
— மாலை – சுமார் 4 மணிக்கு – திரு தேர் வடம் பிடித்தல்
— இரவு – பெரிய தந்த பல்லக்கு – தேர் கால் பார்த்தல்
10 ஜூன், 2025 – செவ்வாய் – நாள் 8
— காலை – தந்த பல்லக்கு
— மாலை – தங்க குதிரை வாகனம்
11 ஜூன், 2025 – புதன் – நாள் 9
— காலை – தந்த பல்லக்கு
— மாலை – தங்க மயில் வாகனம்
12 ஜூன், 2025 – வியாழன் – நாள் 10
— காலை – சப்பரம் புறப்பாடு
— காலை – சுவாமி திருவூடல்
— மாலை – சப்பரம் புறப்பாடு
— இரவு – கொடியிறக்கம்
21. பழனி முருகனும் அருணகிரிநாதரும்
“அவனிதனிலே பிறந்து மதலையெனவே தவழ்ந்து
அழகுபெறவே நடந்து ….”
எனத்தொடங்கும் அருமையான திருப்புகழ்.
பழனிமலை முருகனிடம் தம்முடைய கஷ்டங்களை எல்லாம் சொல்லி நிவர்த்திச் செய்ய வேண்டுகின்றார். சில உலகியல் உண்மைகளையும் அதில் பட்டியல் போடுகின்றார். இந்தத் திருப்புகழின் முன்பகுதியில் தம் (நம்) தகுதியற்ற தன்மையைச் சொல்லி, பின் பாதியில் முருகப்பெருமானுடைய பெருமைகளைச் சொல்லி பாடுகின்றார். மகாதேவராகிய சிவபெருமான் மனம் மகிழும்படி அவரை அணைத்துக் கொண்டு அவருடைய இடப்புறத்தில் வந்தமர்ந்த பார்வதியின் குமரனே! பரிசுத்தமும் கூர்மையும் உடைய வேலாயுதத்தை உடையவனே! இவ்வுலகைச் சுற்றி வருவதற்காக மயில் மேல் ஏறி பூமி அதிரும் படியாக வலம் வந்த வீரக்கழல் அணிந்த முருகனே! பழனிமலையில் (திருவாவினன்குடி) வீற்றிருந்த பெருமாளே! (இதெல்லாம் இந்தப் பழனி மலையில் அவன் வந்தமர்ந்த சிறப்பைச் சொல்வது)
22. என்ன பலன் தருவான் முருகன்?
முருகப் பெருமான் எந்தக் காரணத்திற்காக வேண்டுமானாலும் பழனி மலைக்கு வந்து இருக்கட்டும் ஆனால் என் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பதை திருப்புகழின் முதல் பாதியிலே வைக்கிறார் அது அவர் பிரச்னை மட்டும் அல்ல. நம் போல்வாரின் பிரச்னையையும் தான். அருணகிரிநாதர் முருகனிடம் விவரிக்கிறார். இந்தப் பூமியிலே குழவியாகப் பிறந்தோம். தவழ்ந்து நடை பழகினோம்.
இளைஞனாய் எழுந்து நின்றோம். ஆன்ம உயர்வுக்கு வழி தேடாமல் இளமை தந்த தற்காலிகமான வனப்பினால் உலக இன்பங்களை மட்டுமே பெரிதாக நினைத்து, அது கிடைக்காத போது கவலையில் அலைந்து துடிக்கிறோம். அப்படித்தான் நானும் துடிக்கிறேன். எனக்கு உன் திருவடியைக் காட்ட மாட்டாயா? என்று கேட்கின்றார். வைகாசி விசாகத்தன்று அவனிதனிலே என்று தொடங்கும் இந்தத் திருப்புகழ் பாடலைச் சொல்வது அற்புதமான பலன்களைத் தரும்.
23. சுவாமிமலையில் விசாகம்
முருகனின் அறுபடை வீடுகளில் சுவாமிமலை நான்காம் படை வீடாகும். சுவாமிமலை, தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்துக்கு வடகிழக்கே 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அருணகிரிநாதர் முருகனை குருவாய் வரவேண்டும் என்று கோருகிறார். குருவாய் அரனுக்கு உபதேசம் செய்த அந்த ஞானபண்டிதன் இருக்கும் இடம் திருஏரகம் எனும் சுவாமிமலை. ஆண்டுக்கு ஒரு படியாக 60 வருடங்களுக்கு 60 படிகள் இங்கு உண்டு. முருகன் இங்கு தந்தை சிவபெருமானுக்கு குருவாக இருந்து, பிரணவ மந்திரத்தை உபதேசித்து தகப்பன் சுவாமி என்றும் சுவாமிநாதன் என்றும் திருநாமம் பெற்றார். சுவாமிமலையில் விசாகம் அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வார்கள்.
24. திருத்தணியில் வைகாசி விசாகம்
“சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் …… றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் …… பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக ழுரைக்குஞ் …… செயல்தாராய்”
இது திருத்தணி திருப்புகழ். திருத்தணியில் அருணகிரிநாதர் இருந்தபொழுது சிலர் அவரை இகழ, திருப்புகழைப் பாடி அவர்கள் வருந்தும்படி செய்தார். அற்புதமான திருப்புகழ். கேட்டதை எல்லாம் தரும் திருப்புகழ். திருப்புகழ் ஆனது பகையை அழித்து, உயிர்களை பிறவா நிலைக்குக் கொண்டு சென்று முருகன் திருவடிப் பேற்றினை அளிக்கும். இந்தத் திருப்புகழ் பாடிய திருத்தணித் தலத்தில் வைகாசி பெருவிழா மிகச் சிறப்பாக கொண் டாடப்படும்.
மூலவருக்கு அதிகாலை, 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, தொடர்ந்து தங்கவேல், தங்க கீரீடம் பச்சைமாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடக்கும். மாலை, 5:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர் சண்முகப்பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கும். மலைக்கோயிலுக்கு காலை, 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்வர். பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம், காவடி எடுத்து மலைக்கோவிலை வலம் வந்து மூலவரை வழிபடுவர்.
25. பழமுதிர்சோலையில் வைகாசி விசாகம்
மதுரை மாவட்டம் அழகர்மலையில் பிரசித்திபெற்ற பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடம்தோறும் வைகாசி மாதம் வசந்த உற்சவத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். முருகனுக்கு உகந்த நாளான வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆலயத்தில் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்களுடன் ஷண்முகார்ச்சனை செய்து ஷண்முகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.
தொடர்ந்து சஷ்டி மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானைக்கு, குடம் குடமாக பாலாபிஷேகம் நடக்கும். பின்னர் விபூதி, சந்தனம், தேன், தீர்த்தம், இளநீர், பழம், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட 16 வகையான மஹா அபிஷேகமும் நடக்கும். பின்னர் மகா தீபாராதனைகள் நடைபெறும். நெய் விளக்கேற்றி ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வர். பெரியபாளையம் அடுத்த ஆரணி அருகே சிறுவாபுரி கிராமத்தில் உள்ளது ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில் வைகாசி மாதம் நடைபெறும் திருக்கல்யாண உற்சவம் சிறப்பு வாய்ந்தது.
26. ஆறு நட்சத்திரங்கள் கூடிய விசாகம்
“ஏன் முருகப் பெருமானுக்கு விசாகம் சிறப்பானது?” என்றால், முருகப் பெருமான் ஆறு முகங்களை உடையவன். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. ஒளி பொருந்தியது. இதனால் இந்நாள் சோதி நாள் எனவும் அழைக்கப்படுவதுண்டு. உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் நெற்றிக்கண்ணில் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மை உணர்தலே இந்நாளின் கருத்தாகும்.
27. அறுமுகத் தத்துவம்
கந்தனை ஆறுமுகனாக வழிபடுவதற்கான காரணத்தை திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் விளக்குகிறார். உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம், பக்தர்களுக்கு அருள ஒரு முகம், வேள்விகளைக் காக்க ஒரு முகம், உபதேசம் புரிய ஒரு முகம், தீயோரை அழிக்க ஒரு முகம், பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் சேர்ந்திருக்க முகம். அதனால் தான் ‘சரவணபவ’ எனும் ஆறெழுத்து மந்திரத்தால் வேலனை வலம் வந்து துதிக்கிறோம். சரவணபவ என்பது ஷடாட்சர மஹா மந்திரம். இந்த மந்திரத்தில் ச என்பது லட்சுமிகடாட்சம். ர என்பது ஸரஸ்வதி கடாட்சம். வ என்பது போகம் மோட்சம். ண என்பது சத்ருஜயம். ப என்பது ம்ருத்யுஜயம். வ என்பது நோயற்ற வாழ்வைக் குறிக்கிறது. பிரணவ ஷடாட்சரம் கூறி இவ்வாறு பயன்களைப் பெறலாம்.
28. தமிழும் முருகனும்
கவியரசு கண்ணதாசன் ஒரு திரைப் படப் பாடலில் முருகனைக் கேள்வி கேட் பது போல பல்லவி அமைத்தார். பாட்டு இப்படி ஆரம்பிக்கும். ‘‘என்னடா, தமிழ்க் குமரா, என்னை நீ மறந்தாயோ?’’ இந்தப் பாடலைக் கேட்டவுடன் என்ன இப்படி தமிழ்க் குமரன் என்று சொல்லி இருக்கிறீர்களே, ஆங்கிலக் குமரன், தெலுங்குக் குமரன் என்றெல்லாம் முருகன் இருக்கிறாரா என்று கேட்டபோது கண்ணதாசன் சிரித்துக்கொண்டே சொன்னாராம்.
முருகன் தமிழுக்கே உரிய தெய்வம். அந்த நாமம் தமிழுக்கே உரியது என்றாராம். முருகப்பெருமானின் பன்னிரண்டு கரங்களும் தமிழ் மொழியின் 12 உயிர் எழுத்துக்கள். அவனது 6 முகங்களும் 12 கண்களும் தமிழ் மொழியின் 18 மெய்யெழுத்துக்கள். ஆய்த எழுத்து முருகன் கையில் உள்ள கூர்மையான வேல். அவன் அணிந்துள்ள பல மாலைகளில் சிறந்த மாலை தமிழ் பாமாலைதான்.
29. காவடியின் பயன்கள்
முருகப்பெருமான் விழா என்றாலே காவடி இல்லாமல் இருக்குமா? அவனுக்கே உரிய காவடி ஆட்டம் இருக்குமே. காவடியில் பல வகைகள் உண்டு. காவடி எடுப்பவர்கள் அலகு குத்திக் கொள்வதும் உண்டு. காவடி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு என்பார்கள். சகல ஐஸ்வர்யங்களையும் தரும் பன்னீர் காவடி மனதில் உள்ள குறைபாடுகளை நீக்கும். தங்கக் காவடி எடுப்பதன் மூலம் நீடித்த புகழைப் பெறலாம்.
சர்ப்ப காவடி குழந்தைச் செல்வத்தைத் தரும். மயில் காவடி வீட்டில் உள்ள குடும்ப பிரச்னைகளை நீக்கும். பழக்காவடி தொழிலில் லாபத்தை கிடைக்கச்செய்யும். சந்தனக் காவடி நோய்நொடிகள் தீர்த்து வைக்கும். அலங்காரக் காவடி திருமணத் தடைகளை நீக்கி நல்ல மண வாழ்க்கையைத் தரும். புஷ்பக் காவடி எடுப்பதன் மூலம் மனதின் ஆசைகள் நிறைவேறும்.
30. விசாக விரதம் என்ன கொடுக்கும்?
வைகாசி விசாகத்தன்று பாலபிஷேகம் செய்தும், காவடி சுமந்தும், விரதமிருந்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். எதிரிகள் பயம் அகலும், தீராத நோய்கள் தீரும். பகை விலகி பாசம் பெருகும். வெற்றிகள் சேரும். குலம் தழைக்கும்; பிள்ளை வரத்திற்காக தவம் இருப்பவர்களுக்கு புத்திர பாக்கிய கிடைக்கும். மலைக் கோயில்களில் உள்ள முருகனை வழிபட்டால் முன்வினை பாவம் தீரும். கணவன் மனைவி அன்யோன்யோம் செழிக்கும்.
விசாகத்தில் கந்த சஷ்டிகவசம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், சுப்பிரமணிய ஸ்தோத்திரங்கள் மனதாரப் படிக்க வேண்டும். பூஜையை முடித்த பின்னர் கொஞ்சம் பச்சரிசியை நொய் பொடி செய்து அதோடு வெல்லம் கலந்து ஏதேனும் ஒரு எறும்புப் புற்றுக்கு கொண்டு போய் போட்டு விட வேண்டும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமணப் பேறு கிட்டும்.
எஸ். கோகுலாச்சாரி
The post முத்துக்கள் முப்பது -வினைகளை வேரறுக்கும் விசாகத் திருநாள் appeared first on Dinakaran.