பக்ரீத் பண்டிகை.. தமிழகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்: இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை..!!

3 weeks ago 12

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று பக்ரீத் பண்டிகை. இஸ்லாமிய நாட்காட்டியின் படி துல் ஹஜ்ஜா மாதத்தின் 10வது நாளில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இறைத் தூதர் இப்ராஹீம் நபி, அல்லாஹ்வின் ஆணைக்கு இணங்க தனது மகனை பலியிட துணிந்த தியாக திருநாளையே பக்ரீத் பண்டிகையாக கொண்டாடுகிறோம். இது இறை நம்பிக்கை, தியாகம், பக்தி ஆகியவற்றை போற்றும் திருநாளாகும். இந்த நாளில் சிறப்பு தொழுகைகள் நடத்தி, குர்பானி இடுவது இஸ்லாமியர்களின் வழக்கம்.

இந்நிலையில், நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து ஆண்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் தமிழகம் முழுவதும் திறந்தவெளி மைதானங்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒவ்வொரு மைதானங்களில் நடந்த தொழுகையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அனைத்து மக்களும் அமைதியோடு வாழ வேண்டும். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்தனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளையும் பரிமாறி உற்சாகம் அடைந்தனர். பக்ரீத் பண்டிகை கொண்டாடிய முஸ்லிம்கள், ஏழை மக்களுக்கு உதவி செய்வது வழக்கம். மேலும், பல இடங்களில் இறைச்சிகளையும் ஏழைகளுக்கு தானமாக கொடுத்து மகிழ்ந்தனர்.

The post பக்ரீத் பண்டிகை.. தமிழகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்: இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை..!! appeared first on Dinakaran.

Read Entire Article