சென்னை: ஐ.பி.எல். போட்டியை பார்த்துவிட்டு சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் விபத்தில் உயிரிழப்பு

2 days ago 3

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியை ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்துக்கு நேரில் சென்று கண்டு களித்தனர். அந்த வகையில் இந்த போட்டியை காண்பதற்காக சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கால்வின் கென்னி, சித்தார்த்தன் ஆகிய இருவரும் சென்றுள்ளனர்.

ஆலந்தூர் மெட்ரோவில் பைக்கை நிறுத்திவிட்டு, அங்கிருந்த மெட்ரோ மூலம் சேப்பாக்கத்துக்கு சென்று ஐ.பி.எல். போட்டியை கண்டுள்ளனர். இதையடுத்து போட்டி முடிந்ததும், திரும்பி வந்த இருவரும் ஆலந்தூர் மெட்ரோவில் பைக்கை எடுத்துவிட்டு, சாப்பிடுவதற்காக பைக்கில் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென அவர்களது கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையின் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயமடைந்த மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உயிரிழந்த மாணவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article