
கோவை,
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் டி.ஆர்.பாலாஜி. நகை வியாபாரி. இவர், வடமாநிலங்களில் இருந்து தங்க கட்டிகளை வாங்கி வந்து, கோவையில் நகையாக வடிவமைத்து, மீண்டும் வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் தொழில் செய்து வருகிறார். அவர், கடந்த 6.2.2003 அன்று இரவு சுமார் 8 மணியளவில், 2 கிலோ 150 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை ஒரு பையில் வைத்துக்கொண்டு, கோவை ரெயில்நிலையத்தை நோக்கி குட்ஷெட் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல், திடீரென வழமறித்து கத்தி முனையில் சரமாரியாக தாக்கி 2 கிலோ நகையை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். இதுதொடர்பாக வெரைட்டிஹால் ரோடு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கோவை செல்வபுரம் பொன் னையராஜபுரத்தை சேர்ந்த வெங்கடேசன், ரவிசங்கர், மோகன்ராஜ், பத்மநாபன், ஆர்.முருகன், ஜாவித், உஸ்மான் மொய்தீன், விஸ்வநாதன், ஸ்ரீராம், எம்.முருகன் ஆகிய 10 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து நகைகளையும், வழிப்பறி செய்ய பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின்போது ஜாவித், ஸ்ரீராம் ஆகியோர் இறந்துவிட்டனர். இதனால் மற்ற 8 பேர் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.
இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதி கலைவாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 8 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இதையடுத்து 8 பேரும் போலீஸ் காவலுடன் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி வாதாடினார்.