
சென்னை மதுரவாயல் அன்னை இந்திரா காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கவுதம். இவர் அப்பகுதியில் மனைவி மற்றும் 9 மாத கைக்குழந்தையுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று தனது வீட்டில் அவரது இ- பைக்கிற்கு சார்ஜ் போட்டிருந்தார். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் தம்பதி, குழந்தை உள்பட 3 பேருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதனையடுத்து 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 9 மாத கைக்குழந்தை கடந்த 17ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் குழந்தையின் தந்தை கவுதம் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் குழந்தையின் தந்தை கவுதம் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தை பலியான 4 நாட்களில் தந்தையும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து குழந்தையின் தாய் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.