
இம்பால்,
மணிப்பூரில் குகி-மெய்தி இன குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. 2 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த வன்முறையில் அங்கு பொது அமைதி பாதிக்கப்பட்டுள்ளது. வன்முறையை கட்டுப்படுத்த தவறியதால் முதல்-மந்திரி பைரன் சிங் பதவி விலகினார். அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில் அங்குள்ள மேற்கு இம்பால், கக்சிங், பிஷ்ணுபூர், தொவுபால் பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து நாசவேலைகளுக்கு சதி தீட்டுவதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்கு ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் பெண்கள் உள்பட 11 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கிகள், தோட்டா குவியல்கள், முக்கிய ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.