
சென்னை பல்லாவரம் ரெயில் நிலையம் அருகே செட்டிக்குளம் பகுதியில் குளம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அதனை கற்ற நீதிமன்ற உத்தரவு எட்டப்பட்டது. நிதிமன்ற உத்தரவின்படி அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள், தாம்பரம் வருவாய்த்துறையினர், மேலும் பல்லாவர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
செட்டிக்குளம் பகுதியில் 64 பேருக்கு வருவாய்த்துறை சார்பில் நோட்டிஸ் ஏற்கனவே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு சென்ற அதிகாரிகள் அப்போது அங்குள்ள கட்டிடங்களை அகற்ற முயற்சித்த போது பொதுமக்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது சர்க்கார் நிலம் கிடையாது என அப்பகுதி பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பான ஆதாரங்களை வருவாய்த்துறையினரிடம் அவர்கள் அளித்தனர். இது தொடர்பாக நிதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதாகவும் அதற்கு தங்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து போலீசாருக்கும் அந்த பகுதிகளில் கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கும் கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றதால் அங்கிருந்த வியாபாரிகள் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
இந்த நிலையில் அந்த பகுதியில் மூன்று கடைகள் மற்றும் ஒரு வீட்டின் முகப்பு பகுதியை மட்டும் இடித்துவிட்டு அவர்களுக்கு கால அவகாசம் கொடுத்து விட்டு அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பினர்.