*போலீசார் தீவிர விசாரணை
செங்கோட்டை : செங்கோட்டை அருகே குளத்தில் பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டார். அவர் யார்? எரித்து கொன்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் இருந்து சுரண்டை செல்லும் சாலையில் இலத்தூர் விலக்கு பகுதி அருகே மதினாப்பேரி குளம் உள்ளது.
முட்செடிகள் நிறைந்த, ஆள் நடமாட்டம் இல்லாத இந்த குளத்து பகுதி அருகே உடல் முழுவதுமாக எரிந்த நிலையில் சடலம் கிடந்ததை நேற்று காலை அப்பகுதிக்கு சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து இலத்தூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேரடியாக வந்து விசாரணை நடத்தினார். இதில் எரிந்த நிலையில் கிடந்தது 30 வயது மதிக்கத்தக்க பெண் என்பது தெரியவந்தது. உடல் முழுவதும் எரிந்த நிலையில் இடது கை மட்டும் எரியாமல் இருந்தது.
மேலும் அந்த பெண்ணின் காலில் மெட்டி அணிந்திருந்ததும் தெரியவந்தது. உடலுக்கு அருகில் கிடந்த மது பாட்டில்கள் மற்றும் தடயங்களை சேகரித்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த பெண் யார்? அவரை எரித்துக்கொலை செய்தது யார்? பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post செங்கோட்டை அருகே பரபரப்பு குளத்தில் பெண் எரித்துக்கொலை appeared first on Dinakaran.