சூலூர் அருகே வாலிபர் கல்லால் அடித்துக்கொலை

4 hours ago 2

*பார் ஊழியர் கைது

சூலூர் : தின்பண்டங்களுக்கு கூடுதல் பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கல்லால் அடித்து கொலை செய்த பார் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த கருப்பன் மகன் கவின்ராஜ் (25). இவர் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள குரும்பபாளையம் பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கி பாப்பம்பட்டி பகுதியில் உள்ள கோழித்தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 22ம் தேதி இரவு வழக்கம்போல் தூங்க சென்ற கவின்ராஜ் மறுநாள் காலை எழுந்திருக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டியும் திறக்காதால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது கவின்ராஜ் இறந்து கிடந்தார்.

இது குறித்த புகாரின்பேரில் சூலூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்து உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அவர்களும் உடலை வாங்கி சென்று அடக்கம் செய்தனர். இந்நிலையில், பிரேத பரிசோதனையின்போது மருத்துவர் இறந்த வாலிபரின் இடது புறம் தலையில் கல்லால் அடித்ததுபோல் தெரிகிறது. இது குறித்து விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து கொள்ளலாம் என கூறி உள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் தங்கி இருந்த அறைக்கு சென்று சோதனை செய்தனர். மேலும், அவரது நண்பர்களிடமும் விசாரித்தனர். விசாரணையில், கவின்குமார் கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கடந்த 22ம் தேதி அன்று கவின்குமார் அருகிலுள்ள டாஸ்மாக் பாருக்கு மது அருந்த சென்றார். அங்கு போதையில் பார் ஊழியருடன் தகராறு நடந்ததாக தனது நண்பர் ஒருவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதை அறிந்த போலீசார் குறிப்பிட்ட அந்த டாஸ்மாக் பாருக்கு சென்று விசாரித்தனர்.

பாரில் இருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்தனர். அதில், கவின்குமார் மது அருந்தியபோது, தண்ணீர் பாட்டில், தின்பண்டங்களுக்கு பார் ஊழியர் கூடுதல் பணம் கேட்டதும், இது ெதாடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும், ஆத்திரமடைந்த பார் ஊழியர் கல்லால் கவின்குமார் தலையில் அடித்ததும் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் பார் ஊழியரான ராமநாதபுரம் மாவட்டம் திருவாடை ஆண்டிபூரணி பகுதியை சேர்ந்த தர்மர் (27) என்பவர் மீது கொலை வழக்குப்பதிந்து கைது செய்தனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post சூலூர் அருகே வாலிபர் கல்லால் அடித்துக்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article