விழுப்புரம்: “ராமதாஸ், அன்புமணி இடையேயான கருத்து மோதலுக்கு நான்தான் காரணம் என கூறுவது என்னைக் கத்தியால் குத்தி கொலை செய்வதற்கு சமம்,” என பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உருக்கமாக கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸ் விருப்பத்துக்கு மாறாக, பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் அக்கட்சியின் தலைவர் அன்புமணி. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானது. இது நாளடைவில் கருத்து மோதலாக மாறியது. இதற்கு, பாமக இளைஞரணி தலைவராக தனது மகள் வழி பேரன் முகுந்தனை தன்னிச்சையாக ராமதாஸ் நியமனம் செய்ததே காரணம் என்று கூறப்பட்டது. மேலும், பல்வேறு குடும்ப பிரச்சினைகளும் சூழ்ந்தது. இதனால் கட்சியில் இருவருக்குமான பனிப்போர் தீவிரமடைந்தது.