
பர்மிங்காம்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் படுமோசமாக இருந்தது. இது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அத்துடன் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். அதுவும் தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
மேலும் பந்துவீச்சிலும் ஜஸ்பிரித் பும்ராவை தவிர்த்து மற்ற பவுலர்கள் சொதப்பினர். இதனால் புதிய கேப்டனான சுப்மன் கில்லுக்கு பவுலர்களை சரியாக கையாள தெரியவில்லை என்று பலர் விமர்சித்தனர்.
இந்நிலையில் சுப்மன் கில் பவுலர்களை சரியாக பயன்படுத்தியதாக இந்திய வீரர் பிரசித் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். மேலும் இனிவரும் போட்டிகளில் பின்வரிசை பேட்ஸ்மேன்களும் ரன் அடித்து அணிக்கு வலு சேர்ப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "சுப்மன் கில் அந்த வேலையை (பவுலர்களை கையாள்வது) நன்றாகவே செய்தார் என்று நினைக்கிறேன். பந்துவீச்சாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தி அனைவருக்கும் போதுமான இடைவெளிகள் கிடைப்பதை உறுதி செய்தார். அவர் வாய்ப்புகளை பார்த்து அதற்கு தகுந்தாற்போல் பவுலர்களை பயன்படுத்தினார். அந்த வகையில் அவர் எங்களுடைய அணியில் நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளார்.
சுப்மன் கில் எங்கள் அனைவரிடமும் பேசி வருகிறார். அவருடைய தகவல்கள் மற்றும் திட்டங்களை வைத்து நாங்கள் விளையாட செல்கிறோம். பின்வரிசை பேட்ஸ்மேன்களாக நாங்கள் கண்டிப்பாக எங்களுடைய பேட்டிங்கில் வேலை செய்து வருகிறோம். அதற்காக வலைப்பயிற்சியில் நாங்கள் கடினமான உழைத்து வருகிறோம். இவை அனைத்தும் உங்களையும் உங்களது திறனையும் நம்பி களத்தில் நீண்ட நேரம் நிற்பதைப் பற்றியதாகும். பின்னர் ரன்கள் தானாக வரும்.
எங்களுடைய ஓய்வறை இப்போதும் நேர்மறையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இங்கிலாந்தில் விளையாடும் வாய்ப்பின் அருமைப் பற்றி எங்களுக்குத் தெரியும். முதல் போட்டியில் கூட சில நேரங்களில் தடுமாறினாலும் நாங்கள் எங்கள் திட்டங்களை பின்பற்றி விளையாடினோம்" என்று கூறினார்.