
மும்பை,
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை திட்டத்தின் மூலம், மராட்டிய மாநிலம் முழுவதும் உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தியை கட்டாய 3-வது மொழியாக மாற்றப்படும் என மராட்டிய மாநில அரசு அறிவித்தது. இதற்கு நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில், பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கும் 2 அரசாணைகளை மராட்டிய மாநில அரசு திரும்ப பெற்றுள்ளது. இது குறித்து பேசிய மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை வழங்க கல்வியாளர்கள் குழு ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதனிடையே மராட்டிய அரசை கண்டித்து வரும் ஜூலை 5-ந்தேதி உத்தவ் தாக்கரே சிவசேனா மற்றும் நவநிர்மாண் சேனா கட்சிகள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்த நிலையில், அந்த போராட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், "அரசாணைகள் திரும்ப பெறப்பட்டது மராத்திய அமைப்புகளின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி" என்று தெரிவித்தார்.