
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் இந்திய வீரர் சுபான்சு சுக்லா பிரதமர் மோடியுடன் இணைய நேரலையில் பேசினார். ஒட்டு மொத்த இந்தியர்களின் கனவை பிரதிபலிப்பதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
இதுதொடர்பாக, இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறும்போது, 'சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் இந்திய ககன்யாத்ரி சுபான்சு சுக்லா கடந்த 26-ந்தேதி சென்றார். அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, பிரதமர் மோடி உடன் உரையாடியது வரலாற்று சிறப்புமிக்க நாள். பிரதமரின், இந்த உரையாடல் இந்தியாவின் 140 கோடி மக்களுக்கு உத்வேகம் அளித்து ஊக்கமளிக்கிறது.
மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், சுபான்சு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய பயணம் மூலம் கிடைக்கும் அனுபவம் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கும் பங்களிக்கும். இதன் மூலம் ககன்யான் திட்டத்தையும் முழுமையாக வெற்றி பெற வைக்க முடியும்' என்று கூறினார்.