சுபான்ஷு சுக்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

5 hours ago 2

நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 'பால்கன்-9' ராக்கெட் மூலம், 'டிராகன்' விண்கலம் நேற்று மதியம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணம் செய்தனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) வீரர் சுபான்ஷு சுக்லா (39 வயது) இந்த பயண திட்டம் மூலம் விண்வெளிக்கு சென்றுள்ளார்.

'டிராகன்' விண்கலம் இன்று மாலை சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்ட நிலையில், விண்கலத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவினர் விண்வெளி ஆய்வு மையத்திற்குள் நுழைந்தனர். ஏற்கனவே அங்கு இருக்கும் விண்வெளி வீரர்கள் அவர்களை வரவேற்றனர். இந்திய விமானப்படையின் போர் விமானியாக தனது பயணத்தை தொடங்கிய சுபான்ஷு சுக்லா, இன்று விண்வெளி வீரராக இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். இதன் மூலம் ராகேஷ் சர்மாவை தொடர்ந்து சுமார் 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்கு சென்ற 2-வது இந்தியர், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் இந்தியர் ஆகிய சாதனைகளை சுபான்ஷு சுக்லா படைத்துள்ளார்.

இந்த நிலையில் சுபான்ஷு சுக்லாவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

டிராகன் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் செய்த முதல் இந்தியரான சுபான்ஷு சுக்லாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது இந்த குறிப்பிடத்தக்க சாதனை நமது நாட்டிற்கு பெருமைமிக்க மைல்கல்லாகும். விண்வெளி ஆய்வுத் துறையில் வளர்ந்து வரும் இந்தியாவின் இருப்புக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, சுபான்ஷு சுக்லாவின் துணிச்சலான பணிக்காகவும், நமது நாட்டிற்கு உலகளாவிய அங்கீகாரத்தைக் கொண்டுவருவதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் நான் பாராட்டுகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article