
விருதுநகர்,
சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் திவ்யா, கார்த்திக், சித்ரா ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலுாரைச் சேர்ந்தவர் சித்ரா(54). மக்கள் பார்வை என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகிறார். அவர், திவ்யா கள்ளச்சி என்ற யூடியூப் சேனல் நடத்தி வரும் தஞ்சாவூரைச் சேர்ந்த திவ்யா (30), ஈரோட்டை சேர்ந்த கீழக்கரை சேர்ந்த கார்த்திக் (30) என்பவரும் சேர்ந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் சிறுவர்களை வைத்து ஆபாச ரீல்ஸ் எடுத்துள்ளதாக, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் சித்ரா புகார் அளித்திருந்தார். அதில் தன்னுடைய வங்கி கணக்கை ஹேக் செய்து ரூ.2.5 லட்சத்தை திவ்யா எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட 2 சிறுவர்களிடம் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி விசாரணை நடத்தினார். அதில் யூடியூபர்கள் திவ்யா, கீழக்கரை கார்த்திக் ஆகியோர் சில மாதங்களுக்கு முன் சிறுவர்களை பயன்படுத்தி ஆபாச ரீல்ஸ் எடுத்தது தெரிய வந்தது. இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலரின் புகாரில் திவ்யா, கீழக்கரை கார்த்திக் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் சித்ரா சொல்லி தான் வீடியோ எடுத்ததாக கார்த்திக் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து இவர்கள் மீது போக்சோ உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து விசாரணை நடத்து வந்த நிலையில், தற்போது யூடியூபர் திவ்யா, கார்த்திக், சித்ரா ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே சிறையில் உள்ள 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய விருதுநகர் எஸ்.பி. கண்ணன் பரிந்துரைத்திருந்த நிலையில், விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.