சித்திரை விஷூ பண்டிகை சபரிமலையில் கனி தரிசனம்: பக்தர்களுக்கு கைநீட்டம்

1 day ago 4

திருவனந்தபுரம்: விஷுக்கனி தரிசனத்தை முன்னிட்டு நேற்று சபரிமலை, குருவாயூர், பத்மநாபசுவாமி கோயில் உள்பட முக்கிய கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர். கேரளாவில் சித்திரை விஷு பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். இதை முன்னிட்டு வீடுகளிலும், கோயில்களிலும் விஷுக்கனி தரிசனம் நடைபெறும். காய்கனிகள், பழ வகைகள், புத்தாடை, பணம், நகைகள் உள்பட பொருட்களை பூஜை அறையில் வைத்து காலையில் அதில் கண் விழிப்பது தான் விஷுக்கனி தரிசனம் ஆகும்.

இதை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நேற்று சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு சபரிமலை, குருவாயூர், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் உள்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகளும், விஷுக்கனி தரிசனமும் நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலையிலேயே கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஷுக்கனி தரிசனம் நடைபெற்றது. இதை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர்.

விஷுக்கனி தரிசனத்திற்கு வந்த பக்தர்களுக்கு தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் கைநீட்டமாக நாணயங்களை வழங்கினர். இதற்கிடையே நேற்று முதல் சபரிமலையில் பூஜை செய்யப்பட்ட தங்க டாலர்கள் விற்பனை தொடங்கியது. கேரள தேவசம் போர்டு அமைச்சர் வி.என். வாசவன் தங்க டாலர்கள் விற்பனையை தொடங்கி வைத்தார். விஷுக்கனி தரிசனத்தை முன்னிட்டு குருவாயூர் மற்றும் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலிலும் நேற்று அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

The post சித்திரை விஷூ பண்டிகை சபரிமலையில் கனி தரிசனம்: பக்தர்களுக்கு கைநீட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article