
துபாய்,
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 251 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா 49 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் கோப்பையை தட்டிச்சென்றது.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை 3-வது முறையாக கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இதை இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர். மைதானத்தில் இந்திய அணியின் கொண்டாட்டத்தை பார்க்கவும் ரசிகர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
இந்திய அணியின் வெற்றியையும், கொண்டாட்டத்தையும் ஜியோ ஹாட்ஸ்டார் தரப்பில் தொகுப்பாளர் மயான்தி லாங்கர், கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா உள்ளிட்டோர் வர்ணனை செய்து வந்தனர்.
இந்திய அணியினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது ஒரு கட்டத்தில், சுனில் கவாஸ்கர் தன்னை மீறி களத்திலேயே குழந்தையை போல் டான்ஸ் ஆடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனைப் பார்த்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் நெகிழ்ச்சி அடைந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.