
துபாய்,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இருந்தது.
இந்நிலையில், இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் நாளை பாகிஸ்தானை சந்திக்கிறது. இந்த ஆட்டம் துபாயில் நடக்கிறது. பாகிஸ்தான் அணி தனது தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டிருந்தது. நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால்தான் அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற பாகிஸ்தான் கடுமையாக போராடும்.
அதேவேளையில் நாளைய ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 2017-சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி முயற்சிக்கும். இதன் காரணமாக நாளைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.