துபாய்,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.
இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த தொடர் குறித்தும், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள் குறித்தும் பல முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் தங்களது கணிப்பினை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் முன்னாள் வீரர்களான ரவி சாஸ்திரி (இந்தியா) மற்றும் ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) இருவரும் இணைந்து சமீபத்திய ஐ.சி.சி. நிகழ்வு ஒன்றில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள் குறித்து தங்களது கணிப்பினை வெளியிட்டுள்ளனர்.
அவர்களது கணிப்பின் படி, இறுதிப்போட்டியில் 'இந்தியா - ஆஸ்திரேலியா' மோதும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் தகுதி பெறும் என்று கூறியுள்ளனர்.