![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/25/35796987-yuzi.webp)
மும்பை,
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன.
இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் சிராஜ், சாம்சன் ஆகியோர் இடம் பெறாதது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. மேலும் அந்த அணியில் ஜடேஜா, அக்சர், வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சஞ்சு சாம்சன் ஒருநாள் கிரிக்கெட்டில் நல்ல சராசரி கொண்டிருந்தும் சாம்பியன்ஸ் டிராபியில் எடுக்காததற்கு ஹர்பஜன் சிங் விமர்சனம் தெரிவித்துள்ளார். மேலும் சஹால் போன்ற லெக் ஸ்பின்னர் துபாயில் இந்தியாவின் வெற்றிக்கு அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "சாம்சனுக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ரன்கள் அடித்த பின்பும் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 15 பேர் மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்பது எனக்கு தெரியும். ஆனால் அவருடைய பேட்டிங் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு உகந்தது என்று நான் கருதுகிறேன். 55 - 56 என்ற நல்ல சராசரியை கொண்டிருந்தும் அவர் இரண்டாவது விக்கெட் கீப்பராக கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆனால் அவருடைய இடத்தை பற்றி பேசும்போது யாருக்கு பதிலாக தேர்வு செய்வது என்று சிலர் கேட்கிறார்கள். அந்த வகையில் சஞ்சு இல்லை. சஹாலும் இல்லை.
நீங்கள் 4 சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துள்ளீர்கள். அதில் 2 பேர் இடது கை வீரர்கள். நீங்கள் வேரியசன் பெறுவதற்காக ஒரு லெக் ஸ்பின்னரை அணியில் சேர்த்திருக்கலாம். சஹால் சூப்பரான பவுலர். இருப்பினும் அணியில் இடம் பிடிக்க முடியாத அளவுக்கு அவர் என்ன தவறு செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை.
அதே போல ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக விளையாடுவார் என்று நான் நினைத்தேன். ஆனால் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் அவர் அந்த வாய்ப்பை பெற மாட்டார் என்று தெளிவாக தெரிகிறது. ஏனெனில் மிடில் ஆர்டரில் கோலி, ஸ்ரேயாஸ் விளையாடுவார்கள் என்பதால் அவருக்கு டாப் ஆர்டரில் வாய்ப்பு கிடைக்காது" என்று கூறினார்.