
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருது வழங்கும் விழா கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழாவில் நடிகர் சத்யராஜ் பேசுகையில், "இன்று எனக்கு இருந்த பெரிய குறை நீங்கி விட்டது. தம்பிகிட்ட ஏதாவது வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். பெரியார் திரைப்படத்தில் நடித்து அதற்கு சம்பளம் வாங்காமல் இருந்ததால், பெரியார் 90 வருடங்கள் பயன்படுத்திய மோதிரத்தை ஆசிரியர் வீரமணி கலைஞர் கையால் எனக்கு அணிவிக்க வைத்தார். அதேபோல் எம்.ஜி.ஆரை நான் கண்டபோது, அவர் என்னிடம் என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு நான் நீங்கள் பயன்படுத்தும் ஏதாவது உடற்பயிற்சி உபகரணத்தை தாருங்கள் என்று கேட்டேன். அப்படி அவர் தான் பயன்படுத்திய ஒரு கரலாக்கட்டையை எனக்கு வழங்கினார்.
இப்போது தம்பி திருமாவளவனிடமிருந்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை நான் பெற்றுள்ளேன். அந்த காசோலையை பணமாக மாற்றி, 49 ஆயிரத்து 500 ரூபாயை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நன்கு பயிலும் மாணவர்களுக்கு நன்கொடையாக வழங்கி விடுகிறேன். அந்த ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டை மட்டும் பிரேம் செய்து எனது வீட்டில் மாற்றி வைத்துக் கொள்கிறேன்.
கடவுள் இருக்காரா இல்லையா என்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. சாதி ஒழிப்பே தமிழ் தேசியம். சாதியை வைத்துக்கொண்டு, தமிழ் தேசியம் எப்படி சாத்தியமாகும்? ஆணவக் கொலை எப்படி நடக்கிறது ஜப்பானில் இருந்தா வந்து கொலை செய்கிறார்கள்? ஒரு தமிழன்தான் இன்னொரு தமிழனை வெட்டுகிறான். ஆக சாதி ஒழிய வேண்டும். சாதி ஒழிப்பே தமிழ் தேசியம். அந்த ஜாதியை வைத்துக்கொண்டு அடங்கு என்று சொன்னால் அடங்க மறுப்போம் அத்துமீறுவோம்" என்றார்.
சாதி ஒழிப்பே தமிழ் தேசியம் என்று நடிகர் சத்யராஜ் மேடையில் கூறியதும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் எழுந்து நின்று கைதட்டினார்.