
சென்னை,
யூடியூபரான சவுக்கு சங்கர் போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது. இது தொடர்பான புகாரின்பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சவுக்கு சங்கரை கைது செய்தனர். திருச்சி, சேலம், ஊட்டி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் சவுக்கு சங்கர் மீது புகார் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அந்த பகுதிகளிலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே கோவை, சென்னை ஆகிய பகுதிகளில் முத்துராமலிங்க தேவரை அவதூறாக பேசியதாகவும் அவர் மீது புகார் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அந்த புகாரின்பேரிலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அத்துடன் தேனியில் கஞ்சா வழக்கும் அவர் மீது பதிவானது. இப்படி மொத்தம் தமிழகம் முழுவதும் அவர் மீது 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் காரணமாக ஒவ்வொரு பகுதிக்கும் அவர் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டார்.
எனவே சவுக்கு சங்கர் மீது தமிழகத்தில் உள்ள அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்துக்கு மாற்றம் செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.