
உடல் ஆரோக்கியத்திற்கும் மன ஆரோக்கியத்துக்கும் தூக்கம் மிகவும் அவசியம். தொடர்ந்து சரியாக தூங்கவில்லை என்றால் பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். இது சர்க்கரை நோயாளிகளுக்கும் பொருந்தும். ஆம், சரியாக தூங்கவில்லை என்றால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். தினமும் இரவில் குறைந்த பட்சம் 6-8 மணி நேரம் தூங்குவது உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும் அதிக பலன்களை தரும்.
நல்ல ஆழ்ந்த தூக்கம் இன்சுலின் உணர்திறனை அதிகரித்து, செல்கள் குளுக்கோஸை மிகவும் திறம்பட உறிஞ்ச துணை புரிகிறது. தூக்கமின்மை காரணமாக- கார்டிசால், வளர்ச்சி ஹார்மோன் ஆகியவற்றின் அளவு அதிகரித்து, ரத்த சர்க்கரை அளவு உயர வழி வகுக்கிறது. மேலும் போதுமான அளவு தூங்கவில்லை எனில் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றம் சீர்குலைந்து ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. அது மட்டுமல்ல, தூக்கமின்மையால் கணைய செல்களில் ஏற்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தம் மற்றும் அழற்சி, இன்சுலின் சுரப்பதை குறைத்து ரத்த சர்க்கரை உயர வழி வகுக்கிறது. சரியாக தூங்காமல் இருப்பவர்களுக்கு ஐ.எல்6, டி.என்.எப் ஆல்பா போன்ற அழற்சி குறிப்பான்கள் (இன்பளமேட்டரி மார்க்கர்) அளவு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இது இன்சுலின் எதிர்மறை நிலையை உண்டாக்கி, அதன் செயல்பாட்டை குறைத்து ரத்த சர்க்கரையை அதிகரிக்க கூடும்.
தீர்வுகள்
தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த சர்க்கரை நோயாளிகள் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
படுக்கைக்கு செல்வதற்கு முன் காபி, டீ அருந்துவதை தவிர்க்க வேண்டும். தூங்குவதற்கு முன்னர், டி.வி., செல்போன், லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்த கூடாது. தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்கு சென்று காலை எழுந்திருக்கும் பழக்கத்தை கடைப் பிடிக்கவேண்டும்.
தூங்கும் அறையில் மங்கலான விளக்குகளைப் பயன்படுத்தலாம். படுக்கையறை சூழலை அமைதியாகவும், இருட்டாகவும் பராமரிப்பது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும். தூங்கும் முன்னர் மது அருந்துவது, புகை பிடிப்பது, அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டு. ஏனெனில் இது இரவில் சில சமயம் ஜீரணக்கோளாறுகளை ஏற்படுத்தி, தூக்கத்தை குறைத்து, அதனால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க கூடும்.
