நன்றி குங்குமம் தோழி
கோடை முழுமையாக தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கி இருக்கும் நிலையில் சருமத்தை பாதுகாப்பதற்கு பலரும் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள்.
அதில் ஒன்றுதான் சன்ஸ்கிரீன் பயன்பாடு. சன்ஸ்கிரீன் பயன்படுத்தும் விஷயத்தில் நிறைய கட்டுக்கதைகள் உலாவருகின்றன. அவை பற்றியும் அவற்றின் உண்மைத்தன்மை பற்றியும் பார்ப்போம்.
மேகமூட்டமாக இருக்கும் நாட்களில் சன்ஸ்கிரீன் பயன்படுத்த தேவையில்லை என்று பலர் கூறுகிறார்கள்.
ஆனால், சூரியன் உமிழும் புற ஊதாக்கதிர்கள் மேகங்கள் வழியாகவும் ஊருடுவும் அபாரசக்தி படைத்தவை. அதனால் சூரியனே தெரியாத அளவுக்கு வெயிலே இல்லாமல் இருள் சூழ்ந்த காலநிலை நிலவினாலும் கூட சருமத்திற்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம். கருமையான சரும நிறம் கொண்டவர்கள் சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாக்க தேவையில்லை. அவர்கள் சன்ஸ்கிரீன் பயன்படுத்த தேவையில்லை என்கின்றனர்.
ஆனால், மெலனின் என்னும் நிறமி கருமையான சருமத்திற்கு இயற்கையாகவே பாதுகாப்பு அளிக்கும் என்றாலும் சூரியனிடம் இருந்து முழுமையான பாதுகாப்பை வழங்காது. எந்த நிற சருமம் கொண்டவர்களாக இருந்தாலும் சரும பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.அதிலும் கருமை நிற சருமம் கொண்டவர்கள் போதிய சரும பராமரிப்பை மேற்கொள்ளாவிட்டால் சரும எரிச்சல், கரும்புள்ளிகள் தோன்றுதல், சரும புற்றுநோய் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும். எனவே ஒவ்வொருவரும் சரும நிறத்தை பொருட்படுத்தாமல் சருமத்தை பாதுகாக்க வேண்டும். எனவே, இவர்களும் சன்ஸ்கிரீனை பயன்படுத்தலாம்.
அதிக எஸ்.பி.எப் கொண்ட சன்ஸ்கிரீன் பயன்படுத்தினால் நீண்ட நேரம் வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாத்துக் கொள்ளலாம் என சொல்லப்படுவது உண்மையில்லை. எஸ்.பி.எப் 50 கொண்ட சன்ஸ்கிரீன் ‘சூப்பர் பவர்’ போல் செயல்பட்டு சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்தான். ஆனால் நாள் முழுவதும் வெயிலில் இருந்து பாதுகாப்பை வழங்காது. அதிக வியர்வை வெளிப்பட்டாலோ, நீச்சல் பயிற்சி மேற்கொண்டாலோ மீண்டும் சன்ஸ்கிரீன் பூசிக்கொள்வது அவசியமானது.
குறிப்பாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காலகட்டங்களில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை கூட சன்ஸ்கிரீன் உபயோகிக்கலாம்.முகத்தில் மட்டும் சன்ஸ்கிரீன் உபயோகித்தால் போதும். மற்ற சரும பகுதிகளுக்கு சன்ஸ்கிரீன் தேவையில்லை என பலரும் நினைக்கிறார்கள் இதுவும் தவறானது.
சன்ஸ்கிரீன் என்பது முகத்திற்கு மட்டுமே உபயோகிக்கக்கூடிய கிரீம் அல்ல. கழுத்து, காது, கை, கால்கள் என எல்லா பகுதிகளிலும் சன்ஸ்கிரீனை பூசிக்கொள்ள வேண்டும். ஏனெனில் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்கள் சருமத்தின் எந்த பகுதிக்கும் பாகுபாடு காண்பிக்காது. ஆடை அணிந்த பிறகு மறைக்காத உடல் பாகங்கள் அனைத்திற்கும் சன்ஸ்கிரீன் பூசிக்கொள்ள வேண்டும்.
தொகுப்பு: ரிஷி
The post சருமத்தைப் பாதுகாக்கும் சன்ஸ்கிரீன்! appeared first on Dinakaran.