நன்றி குங்குமம் தோழி
நாம் வெளியே செல்லும்போது காற்றில் பரவும் தூசுகளும், மாசுகளும் முகத்தில் படிந்து முகத்தில் அலர்ஜியை உண்டாக்கிவிடுகின்றது. இதனால் முகப்பருக்களும், கரும்புள்ளிகளும் ஏற்பட்டு முக அழகை சீர்குலைக்கிறது. அதிலிருந்து சரும அழகைப் பாதுகாக்க, முகத்தில் இருக்கும் இறந்த செல்களை அவ்வபோது நீக்க வேண்டும்.
பொதுவாக நமது உடலில் இருக்கும் செல்கள் புதிதாக தோன்றுவதும் பிறகு அழிவதும் மீண்டும் தோன்றுவதுமாக இருக்கும். இப்படி சுழற்சி முறையில் அவை சீராக இயங்கும் போது முகத்தில் சருமத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. இன்னும் சொல்லப்போனால் இப்படியான செல்களின் சுழற்சி சீராக இருக்கும் வரை முகம் களைப்படையாது, சோர்வடையாது. எப்போதும் பொலிவாகவே இருக்கும். ஆனால் இந்த செல்கள் இறந்து வெளியேறாமல் சருமத்துவாரங்களில் அடைபட்டு இருக்கும்போதுதான் பருக்களாக உருவாகிறது.
இப்படி தொடர்ந்து இறந்த செல்கள் வெளியேறாமல் போகும்போது முகத்தில் பருக்கள் அதிகமாவதோடு சருமமும் பொலிவிழந்து போகிறது. இதற்கு, உரிய பராமரிப்பு எடுத்துக் கொண்டால் இறந்த செல்கள் நீங்கி முகம் பொலிவாகும்.
வீட்டில் உள்ள பொருள்களை கொண்டே இறந்த செல்களை எப்படி நீக்குவது? தெரிந்து கொள்வோம்.இறந்த செல்களை நீக்குவதில் வாழைப்பழம் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. ஒரு வாழைப்பழத்தை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்து விழுதாக்கிக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு தேக்கரண்டி தயிர், ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு, ஒரு தேக்கரண்டி பால் பவுடர் ஆகியவற்றை கலந்து நன்கு குழைத்து, முகத்தில் எல்லா இடங்களிலும் தடவிக் கொள்ள வேண்டும்.
முகம் முதல் கழுத்துப் பகுதி வரை தடவ வேண்டும். பின்னர், ஒரு பதினைந்து நிமிடம் வரை வைத்திருந்து நன்கு உலரவிட்டு பிறகு குளிர்ந்தநீர் கொண்டு சருமத்தை சுத்தமாக துடைத்து எடுத்து விட வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் உங்களுடைய சருமம் எப்போதுமே ஆரோக்கியமாக இருக்கும். இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி புதிய செல்கள் புத்துணர்வு பெறச்செய்யும். முகமும் பொலிவாகும்.
தொகுப்பு: தவநிதி
The post சரும அழகை பாதுகாக்க.. appeared first on Dinakaran.