
சென்னை,
சென்னையில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
சாதிய ஏற்றத்தாழ்வுகள் - தீண்டாமை குற்றங்களுக்கு எதிராக போராடியவர் அம்பேத்கர். அம்பேத்கரின் பிறந்தநாளை, சமத்துவ நாளாக திராவிட மாடல் அரசு கொண்டாடி வருகிறது. நீதிக்கட்சியை உருவாக்கிய தலைவர்களில் முக்கியமானவர் எம்.சி.ராஜா. எம்.சி.ராஜா விடுதி கட்டிட முகப்பில், எம்.சி.ராஜாவின் மார்பளவு சிலை வைக்கப்படும்.
புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை அவர் பிறந்த மாநிலமான மராட்டியத்தின் மராத்வாடா பல்கலைக்கழகத்திற்கு வைக்க வேண்டும் எனப் போராட்டங்கள் நடந்தபோது, இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி எனப் பெயர் வைத்தவர்தான் முத்தமிழறிஞர் கலைஞர். சமத்துவத்தை நோக்கி நாம் எல்லோரும் நகர வேண்டும். அம்பேத்கரின் கொள்கைகளை உயர்த்தி பிடித்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு.
திராவிட மாடல் அரசு அம்பேத்கரை தூக்கி பிடித்து போற்றி வருகிறது. சமூக நீதியை நிலைநாட்டும் அரசு, திராவிட மாடல் அரசு. ஒரு சமூகத்தின் முன்னேற்றம் என்பது, அச்சமூக மாணவர்களை எவ்வளவு கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்கிறோம் என்பதில் இருக்கிறது. மாணவர்களின் முன்னேற்றம் என்பது கண்கள் போன்றது; பெண்களின் முன்னேற்றம் என்பது இதயத்துடிப்பைப் போன்றது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. வெளிநாடுகளில் 174 மாணவர்கள் முதுகலை ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். கல்வி, வேலை, அரசாங்கம், அதிகாரம், நிர்வாகம், அறிவு என எல்லாமே ஜனநாயகமாக மாறிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.