
சென்னை,
'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் இடம் பெற்றிருந்த 'கோவிந்தா... கோவிந்தா...' பாடலில் உள்ள வரிகள் வெங்கடேஸ்வராவை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும், இந்த பாடலுடன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஜி.டி.பாலாஜி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கை தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது படத் தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில், குறிப்பிட்ட பாடலில், ஆட்சேபம் தெரிவித்த வரிகள் நீக்கப்பட்டு, பாடல் டியூன் மியூட் செய்யப்பட்டு, புதிய சென்சார் சான்று பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, படத்தை வெளியிட தடை இல்லை என கூறி நாளை(இன்று) விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்தார். இந்நிலையில், இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, படத்திலிருந்து பாடல் முழுவதுமாக நீக்கப்பட்டு விட்டதாகவும் புதிய சான்று பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொணட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.