சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் ஜார்கண்ட் முதல்வரின் தனி செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு

2 months ago 8

ராஞ்சி: ஜார்கண்ட்டில் மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் ஹேமந்த் சோரனின் தனிச் செயலாளர் உள்ளிட்டோரின் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது. ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – இடதுசாரிகள் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. அங்குள்ள 81 தொகுதிகளுக்கும் வருகிற 13 மற்றும் 20ம் தேதி என இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் முதல்வர் ஹேமந்த் சோரனின் தனி செயலாளர் சுனில் வத்சவா உள்ளிட்டோரின் வீடுகளில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

ராஞ்சி, ஜாம்ஷெட்பூர் உட்பட 9 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனை நடக்கும் இடங்களில் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சட்டவிரோத மதுபான வர்த்தகம் மற்றும் சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகளால் தொடங்கப்பட்ட விசாரணைகளின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டது. இதற்கு முன்பு, சட்டவிரோத சுரங்க வழக்கு தொடர்பாக ஹேமந்த் சோரனின் நெருங்கிய உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா மற்றும் அவரது கூட்டாளிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. நாளை ஜார்கண்டில் சட்டப் பேரவை முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் முடிவடையும் நிலையில் முதல்வர் ஹேமந்த் சோரனின் தனி செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவது அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் ஜார்கண்ட் முதல்வரின் தனி செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு appeared first on Dinakaran.

Read Entire Article