
கோவை,
கோவை மாவட்டம் அவினாசி மேம்பாலம் அருகே சுமார் 20 மெட்ரிக் டன் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த டேங்கர் லாரி இன்று அதிகாலை 3 மணியளவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் டேங்கர் பகுதி சேதம் அடைந்ததால் உள்ளே இருந்த எரிவாயு கசிந்தது. இது அந்த பகுதி மக்களுக்கு அச்சத்தை கொடுத்தது.
மேம்பாலம் என்பதால் விபத்து நடந்த பகுதிக்கு மேலே மின் கம்பிகள் எதுவும் இல்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாத வண்ணம் லாரியிலிருந்து கசிந்த எரிவாயு மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். சுமார் 4 மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்த மீட்பு பணிகளையடுத்து தற்போது கசிவு தடுக்கப்பட்டுள்ளது.
ரசாயன மூலப்பொருட்களை கொண்டு எரிவாயு கசிவை கட்டுப்படுத்திய நிலையில் லாரியை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்காக திருச்சியில் இருந்து வாகனம் வரவழைக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ள மக்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், விபத்து நடந்த இடத்திற்கு அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.