![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/02/37121006-chennai-15.webp)
சென்னை,
கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழக அரசு கோவை மாநகரில் மெட்ரோ ரெயில் திட்டத்தை அறிவித்து உள்ளது. கோவை சத்திரோடு மற்றும் அவினாசி ரோடு என இரு பிரிவுகளாக மெட்ரோ ரெயில் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. மொத்தம் 34.8 கி.மீ நீளம் கொண்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் மூலதனச் செலவு ரூ.10 ஆயிரத்து 740 கோடி ஆகும்.
கோவை மெட்ரோ ரெயில் முதற்கட்ட திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. மெட்ரோ திட்டத்தின் நடைமுறைகளை விரைவாக முடித்து செயல்படுத்தும் போது பொதுமக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களை குறைப்பது, நிலத்தை கையகப்படுத்த திட்டம் தயாரித்தல், சாலை, மேம்பாலத்துடன் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பணிகள் தொடங்கி உள்ளன.
அதன்படி, கடந்த மாதம் 30-ம் தேதி கோவை சத்திரோடு கணபதி டெக்ஸ்டூல் முதல் சரவணம்பட்டி வரை மெட்ரோ ரெயில் பயண பாதைக்காக நிலம் கையகப்படுத்துதல் குறித்து மெட்ரோ திட்ட இணை பொது மேலாளர் நாகேந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலையின் அளவு, கட்டிடங்கள், மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு தேவையான தனியார் மற்றும் அரசு நிலம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து வரைபடம் மூலம் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த நிலையில், கோவை மெட்ரோ ரெயில் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்த முதற்கட்டமாக ரூ.154 கோடியை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் ஒதுக்கியுள்ளது. நகரில் மெட்ரோ ரெயில் நிறுவன அலுவலகம் அமைக்க மாநகராட்சி இடம் ஒதுக்க உள்ளது. மெட்ரோ திட்டப்பணிகளுக்கு நிலம் எடுப்பதற்கான சர்வே தொடங்கி, அதன்பிறகு வருவாய்த்துறை மூலம் கையகப்படுத்தும் பணிகள் நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.